புதன், பிப்ரவரி 24, 2010

நீ கடவுள்!



வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்;
வாழ விடாதவர்களுக்கு நான் தரும் மரணம் தண்டனை! அஹம் ப்ரமாஸ்மி....
ருத்ரன் வேஷத்தில் வாழ்ந்திருந்த ஆர்யாவின் வசனங்கள் செவிகளுக்குள் நுழைந்து மனதைப் போட்டு பிசைந்தது.
ஏற்கனவே பார்த்த படம் தான் என்றாலும் பாலாவுக்கு அவார்டு கொடுத்த பின்னர் பெருமிதத்துடன் இரண்டாம் ஆட்டமாய் பார்த்தபோதும் முதல்முறை ஏற்பட்ட உணர்வே வர தன் சைக்கிளை மிதித்தபடி யோசனையில் வீட்டுக்கு புறப்பட்டான்.
நெல்லை டவுன் தர்மராஜா நகரில் இருக்கும் மாநகராட்சி குளியலறை வழியாக தன் சைக்கிளை விட்டவனை அங்கே கேட்ட முனகல் குரல் பிரேக்கிட செய்தது.
சோடியம் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் சத்தம் வந்த இடத்தைப் பார்த்தவாறு சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டான்.
ஒரு நாய் குளியலறையின் உள்ளே போவதும் வெளியே வருவதுமாய் இருந்தது.
நாள் உள்ளே போகும்போதெல்லாம் அந்த சத்தம் கேட்டது.
ச்சீ... நாயை நோக்கி பறந்தது அவன் உதிர்த்த சொல்லோடு எரிந்த கல்...
தன் ஈனக்குரலை விட்டபடி அங்கிருந்து நாய் ஓடியதும், அந்த அறைக்குள் எட்டிப்பார்த்தான்.
தன் கையில் வைத்திருந்த டார்ச் விளக்கை அடித்தவன் கண்ட காட்சி நிலைய குலைய வைத்தது.
உயிருள்ள ஒரு பிரேதமாய் மூலையில் சுருங்கிக் கிடந்தாள் அந்தக் கிழவி. எழுபதுக்கும் மேலான வயதிருக்கும். உடம்பிலிருந்த புண்களை நாய் கடித்ததால் வழிந்து கொண்டிருந்தது ரத்தம். மரண வேதனையை அனுபவிப்பவள் போல் தோன்றியது. பார்த்தவுடன் தெரிந்தது உறவுகளின் குப்பை இந்தக் கிழவி என்று.
கொஞ்சம் தள்ளி மூடிக்கொண்டிருந்த டீக்கடைக்கு சென்று காயின் போனில் 108க்கு டயல் செய்து ஆம்புலன்ஸுக்காக காத்திருந்தான்.
... என்ன உலகம்... என்ன குடும்ப உறவுகள்... உறவுகளின் குப்பையாக எறியப்பட்டிருக்கும் இந்தக் கிழவி... 'நான் கடவு'ளில் நாம் பார்த்த பிச்சை எடுக்க வைக்கும் கும்பலுக்கும் இந்த கிழவியை இந்தக் கதிக்கு ஆளாக்கிய உறவுகளுக்கும் என்ன வித்தியாசம். அனாதை ஆசிரமங்களும், முதியோர் இல்லங்களும் பெருகுவது தான் இன்றைய நாகரிக வளர்ச்சிக்கான எச்சங்கள் போலும்...
இரவின் நிசப்தத்தை கிழித்தபடி வந்தது ஆம்புலன்ஸ்.
'யாருப்பா போன் பண்ணுனது?'
நாந்தான்...
இந்தக் கிழவி உனக்கு என்ன வேணும்?
பாட்டி வேணும்.
அம்மா வழி பாட்டியா, அப்பா வழி பாட்டியா?
நேரு எப்படி நமக்கு மாமாவான்னாரு, காந்தி எப்படி தாத்தாவானாரு அது மாதிரி இந்த கிழவியும் எனக்கு பாட்டியானாங்க....
அவன் பதிலிலேயே கேள்வி கேட்டவன் நிலவரத்தை விளங்கிக் கொள்ள, கிழவியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு அவனையும் கூட வைத்தபடி ஹைகிரண்டை ஆஸ்பத்திரியை நோக்கிக் கிளம்பியது ஆம்புலன்ஸ்...
எப்படியும் இந்த கிளவியை காப்பாற்றி நம்மோடு அழைத்துச் செல்ல வேண்டும். அனாதையாய் இருக்கும் நாம் இந்தக் கிழவிக்காவது ஆதரவாக இருக்கலேமே எண்ணியபடி இருந்தவைன் கைகளை கிழவியின் கைகள் பற்றிக் கொண்டிருந்தது.
வாழ இயலாதவர்களுக்கும் வாழ்வளிப்பவன் கடவுள்தான். நீ கடவுள்!

கருத்துகள் இல்லை: