புதன், பிப்ரவரி 24, 2010

நீ கடவுள்!



வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் மரணம் வரம்;
வாழ விடாதவர்களுக்கு நான் தரும் மரணம் தண்டனை! அஹம் ப்ரமாஸ்மி....
ருத்ரன் வேஷத்தில் வாழ்ந்திருந்த ஆர்யாவின் வசனங்கள் செவிகளுக்குள் நுழைந்து மனதைப் போட்டு பிசைந்தது.
ஏற்கனவே பார்த்த படம் தான் என்றாலும் பாலாவுக்கு அவார்டு கொடுத்த பின்னர் பெருமிதத்துடன் இரண்டாம் ஆட்டமாய் பார்த்தபோதும் முதல்முறை ஏற்பட்ட உணர்வே வர தன் சைக்கிளை மிதித்தபடி யோசனையில் வீட்டுக்கு புறப்பட்டான்.
நெல்லை டவுன் தர்மராஜா நகரில் இருக்கும் மாநகராட்சி குளியலறை வழியாக தன் சைக்கிளை விட்டவனை அங்கே கேட்ட முனகல் குரல் பிரேக்கிட செய்தது.
சோடியம் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் சத்தம் வந்த இடத்தைப் பார்த்தவாறு சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டான்.
ஒரு நாய் குளியலறையின் உள்ளே போவதும் வெளியே வருவதுமாய் இருந்தது.
நாள் உள்ளே போகும்போதெல்லாம் அந்த சத்தம் கேட்டது.
ச்சீ... நாயை நோக்கி பறந்தது அவன் உதிர்த்த சொல்லோடு எரிந்த கல்...
தன் ஈனக்குரலை விட்டபடி அங்கிருந்து நாய் ஓடியதும், அந்த அறைக்குள் எட்டிப்பார்த்தான்.
தன் கையில் வைத்திருந்த டார்ச் விளக்கை அடித்தவன் கண்ட காட்சி நிலைய குலைய வைத்தது.
உயிருள்ள ஒரு பிரேதமாய் மூலையில் சுருங்கிக் கிடந்தாள் அந்தக் கிழவி. எழுபதுக்கும் மேலான வயதிருக்கும். உடம்பிலிருந்த புண்களை நாய் கடித்ததால் வழிந்து கொண்டிருந்தது ரத்தம். மரண வேதனையை அனுபவிப்பவள் போல் தோன்றியது. பார்த்தவுடன் தெரிந்தது உறவுகளின் குப்பை இந்தக் கிழவி என்று.
கொஞ்சம் தள்ளி மூடிக்கொண்டிருந்த டீக்கடைக்கு சென்று காயின் போனில் 108க்கு டயல் செய்து ஆம்புலன்ஸுக்காக காத்திருந்தான்.
... என்ன உலகம்... என்ன குடும்ப உறவுகள்... உறவுகளின் குப்பையாக எறியப்பட்டிருக்கும் இந்தக் கிழவி... 'நான் கடவு'ளில் நாம் பார்த்த பிச்சை எடுக்க வைக்கும் கும்பலுக்கும் இந்த கிழவியை இந்தக் கதிக்கு ஆளாக்கிய உறவுகளுக்கும் என்ன வித்தியாசம். அனாதை ஆசிரமங்களும், முதியோர் இல்லங்களும் பெருகுவது தான் இன்றைய நாகரிக வளர்ச்சிக்கான எச்சங்கள் போலும்...
இரவின் நிசப்தத்தை கிழித்தபடி வந்தது ஆம்புலன்ஸ்.
'யாருப்பா போன் பண்ணுனது?'
நாந்தான்...
இந்தக் கிழவி உனக்கு என்ன வேணும்?
பாட்டி வேணும்.
அம்மா வழி பாட்டியா, அப்பா வழி பாட்டியா?
நேரு எப்படி நமக்கு மாமாவான்னாரு, காந்தி எப்படி தாத்தாவானாரு அது மாதிரி இந்த கிழவியும் எனக்கு பாட்டியானாங்க....
அவன் பதிலிலேயே கேள்வி கேட்டவன் நிலவரத்தை விளங்கிக் கொள்ள, கிழவியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு அவனையும் கூட வைத்தபடி ஹைகிரண்டை ஆஸ்பத்திரியை நோக்கிக் கிளம்பியது ஆம்புலன்ஸ்...
எப்படியும் இந்த கிளவியை காப்பாற்றி நம்மோடு அழைத்துச் செல்ல வேண்டும். அனாதையாய் இருக்கும் நாம் இந்தக் கிழவிக்காவது ஆதரவாக இருக்கலேமே எண்ணியபடி இருந்தவைன் கைகளை கிழவியின் கைகள் பற்றிக் கொண்டிருந்தது.
வாழ இயலாதவர்களுக்கும் வாழ்வளிப்பவன் கடவுள்தான். நீ கடவுள்!

சனி, பிப்ரவரி 20, 2010

அஜீத் - ரஜினி: இலக்கின் பின்னால் இருப்பவர் யார்?





"இனிமேலும் அந்த அம்மாவை ஆட்சியில் அமர வைத்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாத்தமுடியாது" - 95 தேர்தல் களத்தில் தமிழகத்தின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் உதிர்த்த வாசகம் அவரை நேரடி அரசியல் களத்துக்குள் பிரவேசிக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்தாலும், சொன்னாலும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டு அவரே வேண்டாம் என்றாலும் அவரைப் பற்றிக்கொண்ட அரசியல் விடுவதாக இல்லை.
டாக்டர் ராமதாஸுக்கு எதிராக கருத்து கூறி 'பாபா' திரைப்படத்தை அவர்கள் திரையரங்குகளில் ஓட விடச்செய்யாமல் தடுத்ததிலிருந்து தமிழக அரசியலில் ரஜினி கூடுதலாகக் கவனிக்கப்பட்டார்.
பின்னர் ஜெயலலிதாவுடனும், கருணாநிதியுடனும் சுமூகப் போக்கை மேற்கொண்டு தன்னைக் காத்துக் கொள்ள பெரும்பாடுபட்டுக் கொண்டு இருந்தாலும், அரசியல் கழுகுகள் எப்போதும் அவரை துரத்துவதற்கான நேரம் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.

சமீப நாட்களாக தமிழக அரசின் விழாக்களிலும், தமிழக முதல்வருக்கு எடுக்கப்படும் விழாக்களிலும் அரசவைக் கலைஞர் போல இவரும் அழைக்கப்பட்டும் வருகை தந்து வாழ்த்துரைத்தும் வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னால் திரைப்படத்துறை சார்பில் முதல்வருக்கு எடுக்கப்பட்ட விழாவில் நடிகர் அஜீத் பேசியபோது, தங்களைக் கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் அழைத்து வருவதாக உண்மையை சபையறியாமல் பேசிவிட்டார். இந்த உண்மைக்காகவே ரஜினிகாந்த்தும் சபையிலேயே தனியாக எழுந்து கைதட்டிவிட்டார்.
முதல்வர் முன்னால் எப்படி இவர் பேசலாம் என்று அஜீத்தையும், எப்படி ஆமோதித்து கைதட்டலாம் என்று ரஜினியையும் இப்போது பிடித்து விட்டார்கள் அரசியல்வாதிகளின் அருவருடிகள் கூடவே அரசியல் முகம் மறைத்து திரியும் கலையுலகினரும்.
எங்கே இது மீண்டும் தலைவலியாகுமோ என்று தன் மகள் திருமண நிச்சயதார்த்தத்துக்குப் முதல்வர் வந்த பிறகும் மீண்டும் அவரது இல்லம் சென்று தனி சந்திப்பு நடத்தி தன் விளக்கத்தை தெளிவுபடுத்தியதோடு, நடிகர் அஜீத்தையும் முதல்வரை சந்திக்கச் சொல்லி விளக்கமளிக்க வைத்தார் ரஜினி.


ஆனாலும் இப்போது பிரச்னை தீரவேயில்லை. முதல்வரை சந்தித்து திரும்பும் முன்னதாகவே, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வீட்டில் கல்லெறிந்ததாக அஜீத் மன்றத்தினர் மீதும், தாக்குதலுக்கு தூண்டியதாக அஜீத்குமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறுநாள் பார்த்தால் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் வி.சி.குகநாதன், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன், இருவரும் சங்கமுடிவுகளுக்கு கட்டுப்படாவிட்டால் சங்கத்திலிருந்து தூக்கி வீசப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வமோ அஜீத் படத்தை திரையிடுவதா வேண்டாமா என்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் சில தினங்களில் நடிகர் சங்கம் சார்பாகவும் இந்த இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் அழுத்தம் தரப்படும்.
பொதுச்சபையில் தனக்கான மரியாதை குறைந்ததாக கருதிய ஒரு தனி மனிதரின் கோபம் எந்த அளவுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதே ரஜினி, அஜீத் விவகாரங்களுக்கான விதை என்பது சொல்லாமலே தெரியும்.

கொசுறு: இப்போது அரசின் விழாக்கள் என்றாலே இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் மட்டுமே குத்தகைக்கு எடுத்து ஒளிபரப்பி வருகின்றன. இந்த ஒளிபரப்பின் விளம்பரம் அதிகரிக்க வேண்டும் என்றால் அரசவைக் கலைஞர்கள் (ரஜினி, கமல்....)மற்றும் துணை நிலைக் கலைஞர்கள் (விஜய், சூர்யா, அஜீத், சிம்பு....) கலந்து கொள்ள வேண்டும். அதனால்தான் அவர்கள் மிரட்டப்பட்டாவது விழாக்களுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இல்லாவிட்டால் அவர்களது வீட்டில் வருமானவரித்துறையிலிருந்து கார்ப்பரேஷன் வரை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

கூடுதல் கொசுறு: திரை நட்சத்திரங்களை தங்கள் விழாக்களுக்கு அழைத்து பப்ளிசிட்டி தேடிக் கொள்வது என்பது காமராஜர், அண்ணா, காலத்திலிருந்தே நடந்து வருகிறது. காலங்களுக்கேற்ப கலைஞர்களும், அரசியல் தலைவர்களும் மாறிக் கொண்டே வருகிறார்கள். அவ்வளவுதான்!

திங்கள், பிப்ரவரி 15, 2010

எஸ்.ராமகிருஷ்ணனுடன் கலந்துரையாடல்!


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்ட ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நான் பணியாற்றும் விகடன் அலுவலகத்தில் நடந்தேறியது.
விகடன் எம்.டி. பா.சீனிவாசன் நிகழ்ச்சி அறிமுகத்தைத் தொடர்ந்து தனது உரையாடலைத் தொடங்கினார் எஸ்.ராமகிருஷ்ணன்..... அதிலிருந்து சில வரிகள்...

கட்டாயம் என்ற சொல்லை நாம் பயன்படுத்தும் விதம் வேறு. ஆனால் கட்டாயம் என்பதன் அர்த்தம் கட்டு+ ஆயம். கட்டு என்பது நிலத்தையும் ஆயம் என்பது வரியையும் குறித்து நிலவரி என்பதான சொல்லே கட்டாயம். நாம் இன்று அதைப் பயன்படுத்தும் தன்மை வேறு விதமாக இருக்கிறது.

செய்தியாளர் உணர்ச்சியின் அடிப்படையில் செய்திகளை பார்ப்பதை தவிர்த்து உண்மையின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.

வழக்கமான சொல்லையே பயன்படுத்திக் கொண்டிருக்காமல் புதிய புதிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும். ஒரே சொல் பல்வேறு இடங்களில் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் தன்மை தமிழ் மொழியில் மட்டுமே உண்டு...

உறவுகளுக்குள் நம்மை ஊடுருவிப் பார்க்க வேண்டும். நவீனத்துவமாகி வரும் குடும்ப வாழ்க்கையில் எந்திரத்தனமாக இயங்காமல் வாழ்க்கையை கொஞ்சம் சுவாரஸ்யத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

புறச்சிந்தனைகளை வளர்க்கும் விதமான கேள்விகளை நமக்குள் எழுப்பி அதற்கான தீர்வைத் தேடும்போது இன்னும் நாம் சுவாரஸ்யமான பாதையில் பயணிக்கலாம். மகாபாரதத்தை படித்தால் பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கும்.

அழகான தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜஹான் தான் நம்மை ஐநூறு வருடங்கள் ஆங்கிலேயர் அடிமையாக வைத்ததற்கு பிள்ளையார் சுழி. தீயில் கருகிய தன் மகளின் முகத்தை குணப்படுத்திய வெள்ளை டாக்டர் கோரிய வரியில்லா வர்த்ததகத்துக்கு ஷாஜஹான் வழங்கிய அனுமதிதான் பிரிட்டீஸ் அரசு நம்மை ஆண்டது...

உறவுகள் தொடர்பாக ஆறுமுக நாவலரின் கதைகளையும் அவர் சுட்டிக்காட்டிப் பேசியபோது உண்மையிலேயே தந்தையின் அரவணைப்பு என்பது ஆண் குழந்தைகளுக்கே கிடைக்காத ஒரு பொக்கிஷம் என்பது தெரியவந்தது....

புத்தரின் மகன் நகுலன் தவறு செய்துவிட்டான். அந்த தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்று விரும்பியவர் தன் அறையில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் வைத்திருந்தார். நகுலன் அங்கே வந்ததும் அந்த பாத்திரத்தில் கையை கழுவச் செய்தார். பின்னர் அந்த தண்ணீரை குடிக்கச் சொன்னார். அழுக்குத் தண்ணீர் என்று நகுலன் சொன்னதும், அந்த தண்ணீரை அழுக்காக மாற்றியது யார் என்று கேள்வி எழுப்பி சிந்திக்கச் செய்ததன் மூலம் அவன் தவறை அவனே உணரச் செய்து திருத்தினார்.

நல்லபல தகவல்களைச் சொன்னவர் கடைசியாக பத்திரிகையாளர்கள் பார்ப்பதற்காக பல ஆங்கிலப் படங்களைச் சுட்டிக்காட்டி சென்றார்................


பெயர் மட்டுமே தெரிந்திருந்த ஒரு எழுத்தாளரை நேரில் சந்தித்து, அவர் கூறியதை சிந்திக்க முடிந்தது.

வியாழன், பிப்ரவரி 11, 2010

சிந்தியுங்கள் சிங்களப் பெண்களே!


"என் கணவர் கைது செய்யப்படவில்லை. இலங்கை அரசால் கடத்தப்பட்டுள்ளார். இன்று நான் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதேபோன்று நாளை ஏனைய பெண்களுக்கும் எனது நிலைமை ஏற்படக்கூடும். இந்த ஆபத்தான போக்கை எதிர்த்துப் போராட என்னுடன் அணிதிரளுங்கள்?" - பத்திரிகையாளர் சந்திப்பில் அனோமா பொன்சேகா கண்ணீருடன் உதிர்த்த வார்த்தைகள் இவை.
2009 மே நடுப்பகுதியில் புலிகளுடனான போர் முடிவடைந்தது என்று தென்னிலங்கையில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற போது கணவர் இராணுவத்தளபதி பொன்சேகாவை நாடு போற்றிப் புகழுவதைக் கண்டு பூரித்து நின்ற திருமதி பொன்சேகா ஒரு வருடகாலத்திற்குள் கணவருக்கும் தனக்கும் இந்த நிலைவருமென்று கனவிலும் நினைத்திருப்பாரா.................?

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைத் தனது உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமான ஜெனரல் ஹவுஸுக்கு விருந்துக்கு அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். போர் தீவிரமடைந்திருந்த இறுதி இரண்டு ஆண்டுகளின் தொடக்கத்திலும் விருந்துபசாரங்களின்போது ஜெனரல் பொன்சேகா வேதாளம் ஒன்று புலியை மடக்கிப் பிடித்து வைத்திருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட மேலங்கியை அணிந்த வண்ணம் ஊடகவியலாளர்களுடன் போர் நிலைவரங்கள் பற்றி கலகலப்பாகப் பேசிக்கொண்டிருப்பார். தனது பேச்சில் இந்தப்போரை அடுத்த தளபதிகளின் கைகளில் விட்டுவிடப்போவதில்லை; தன் பதவிக்காலம் முடியும் முன்பு தாமே முடிவுக்கு கொண்டுவருவதாக பிரகடனப்படுத்தியிருக்கிறார்.
ஜெனரல் பொன்சேகா தான் கூறியவாறே போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு விட்டுவைக்காமல் தனது பதவிக்காலத்துக்குள்ளேயே அதை முடிவுக்குக் கொண்டுவந்தார். ஆனால், தனக்கு அடுத்ததாக இராணுவத் தளபதியாகப் பதவியேற்கக் கூடியவர் தன்னைக் கைது செய்து தடுத்துவைப்பதற்கான உத்தரவைப் பிறப்பிப்பார் என்று ஜெனரல் கனவிலும் நினைத்திருப்பாரா..................?

திருமதி அனோமா பொன்சேகாவிடம் ஒரு கேள்வி?
எங்கட காப்பாத்துங்கோ... என்று உலகமே கேட்க ஒப்பாரி வைத்த தமிழினத்தினத்தின் அழுகுரல் உங்கள் செவிகளில் எட்டவில்லையா... பத்துமாதம் சுமந்து பெற்று பசிக்கு மார்பமுது வழங்கும் நிலையில் பாஸ்பரஸ் குண்டுகளில் கருகிய தாய் சேயின் சதைக்கட்டையின் காட்சி உங்கள் கண்களில் கண்ணீர் வரவழைக்கவில்லையா... புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் பிறந்த சிசு முதல் இறப்பு நோக்கிய முதியவர் என தமிழினம் அழிப்பில் உங்கள் கணவர் 'கடமை' கருப்புக் கண்ணாடி அணிந்தபடி செய்த கொடூரங்கள் உங்கள் நினைவுகளில் இருந்து நீங்கி விட்டதா?
புலிகளை அழித்து விட்டோம் என்று கொண்டாடிவிட்டு இன்று தங்கள் மண்ணுக்குள்ளேயே நாடோடிகளாய் முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவது உங்களைப் போன்ற பெண்களுக்கெல்லாம் தெரியவில்லையா?
பதவிக்காகவும், பெயருக்காகவும் இந்தக் கொடுஞ்செயலைப் புரிந்து விட்டு பழியிலிருந்து தப்பிக்கவும், தன்னை காத்துக்கொள்ளவும் அரசுக் கட்டிலில் ஏற முயன்று தேர்தலில் நின்று தோற்றுப் போனவர் உங்கள் கணவர். இன்று ஆளும் வர்க்கம் தன் இனத்தையே வேட்டையாடத் தொடங்கி இருக்கிறது. உங்கள் கணவருக்கு ஒன்று என்றவுடன் ஒப்பாரி வைக்கிறீர்கள்... ஊர்ப் பெண்களையெல்லாம் உங்களுக்கு ஒத்துழைக்க அழைக்கிறீர்கள்... நாளைக்கு உங்களுக்கும் இந்த நிலை வரலாம் என்று ஆரூடம் செய்கிறீர்கள்...
தமிழினம் கதறும்போது, பெண்கள் அங்கே மானபங்கம் செய்யப்பட்டபோது, நம்மினம் (பெண்ணினம்) என்று அந்த அபலைத் தமிழ்ப் பெண்களுக்காக நீங்கள் செய்தது என்ன? சிதறிச் செத்த சிசுக்களுக்காக நீங்கள் செய்தவை என்ன?
இந்தக் கேள்வி அனோமா பொன்சேகாவுக்கு மட்டுமல்ல, அதிகார வர்க்கத்து குடும்பப் பெண்கள் அனைவருக்கும்தான். ராணுவத்தில் தன் கணவனை, மகனை, தம்பியை, தந்தையை என்று பணிக்கு அனுப்பியிருக்கும் ஒவ்வொரு சிங்களப் பெண்ணினத்துக்கும்தான். தவறிழைக்கும் ஆண்களை திருத்துவதில் பெண்களின் பங்குதான் அதிகம் இருக்கிறது. உங்கள் பங்களிப்பை நீங்கள் ஒழுங்கே செய்திருந்தால், போர் என்ற பெயரில் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது. வினையை விதைக்காமல் வினையை அறுக்காமல் இருந்திருக்கலாம்....
இனிமேலாவது சிந்தியுங்கள்... முகாமில் இருக்கும் தமிழர்களுக்கான வாழ்க்கையாவது மலர்ச்சி அடையட்டும்....

சனி, பிப்ரவரி 06, 2010

அழகிரி திராவிட முன்னேற்றக் கழகம்

'அண்ணனை' பார்க்க வந்துட்டாருல்ல! இனி அவருக்கு ஏத்தம்தான். மாப்ளே இப்பவே நாமளும் ஆளுக்கு ஒரு பூமாலை வாங்கியாந்து 'அண்ணனுக்கும்' 'அவருக்கும்' போட்டுடுவோம். நாளைக்கு கட்சி மாறிப்போனாலும் நம்மளையும் அரவணைச்சுக் கொண்டு போய்சேர்த்திடுவாரு அவரு. போறப்போக்கப் பார்த்தா இனிமே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகங்கிறது 'அண்ணன் திராவிட முன்னேற்றக் கழகம்'னு ஆகிடும் போல...
மதுரையில் அழகிரியை, அ.தி.மு.க. எல்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் சந்தித்து 'தன் கோரிக்கை'மனு அளித்தபோது இப்படித்தான் பேசியிருப்பார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
அனிதா ராதாகிருஷ்ணன் சொன்னபடியே முதலில் ராதாகிருஷ்ணனை இழுத்து வந்து நிறுத்தி விட்டார். இனிமேலும் தென்மாவட்டங்களில் உள்ள ரத்தத்தின் ரத்தங்கள் உடன்பிறப்புகளாக சங்கமிக்கும் நாள் வெகுதூரமில்லை.... இது நம் கண்முன் தற்போது நடைபெறும் காட்சிகள்... இந்தக்காட்சிகளின்கோர்வை நாளைய ஒரு முக்கிய பிரிவுக்கான அசைன்மெண்டாக கூட இருக்கலாம்.
அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கப்போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் தகப்பன்சாமி, அதற்கு முன்னால் தன் வாரிசுகளுக்கிடையே நடந்து கொண்டிருக்கும் அரசியல் கௌரவத்துக்கான பனிப்போரை எப்பாடுபட்டேனும் முடிவுக்கு கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
தகப்பன் சாமியின் பங்கீடு ஏதாவது வில்லங்கமாகாது, அப்படி வில்லங்கமாகி விட்டால் நாளையே கட்சியிலிருந்து வெளியேறி புதிதாக ஒரு கட்சி அமைப்பதைக் காட்டிலும் இப்போதே இன்னொரு கட்சியின் தளகர்த்தாக்களை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து கூடிய விரைவிலேயே அந்த கட்சியையே தனது கட்சியாக்கும் தொலைநோக்கு(?) சிந்தனையின் வடிவம்தான் தற்போது அரங்கேறி வரும் ஆள்பிடிப்பு வேலைகள்.
அரசியல் வியாபாரி பணத்தை தன்னிடம் வைத்துக் கொண்டே இருந்தால் வளர்ந்து விடாது. அதை தன்னை நாடிவருபவருக்கு பங்கிட்டுக் கொடுத்து வட்டியும் முதலுமாக கொடுத்தவனிடம் இருந்து அவன் கையாலேயே தரவைக்கும் யுக்தி படைத்தவனாக இருக்க வேண்டும்.
போயஸ் வியாபாரிக்கு இந்த சூட்சுமம் தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் அருகிருக்கும் சிலர் சில்லறையை வெளியே கொண்டுவர விரும்பவில்லை.
ஆனால் 'அண்ணன்' இன்றைய முதலீட்டை நாளைய வருமானமாக்கி அரசியல் அஸ்திவாரத்தை திடப்படுத்திக் கொண்டு வருகிறார். தம்பியின் கவனத்தை பதவிக்கான காய்நகர்த்துதலிலேயே இருக்கிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்... அரசியல் பீடம் அண்ணனிடமா? தம்பியிடமா?

வியாழன், பிப்ரவரி 04, 2010

புகை ஒழிப்போம்... புற்றுநோய் தடுப்போம்!



உலகை அச்சுறுத்திவரும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதனை தடுக்கும் முறைகள், அதற்கான சிகிச்சைகள் பற்றிய தகவல்களை பரப்புவதற்கும் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 ஆம் தேதி "உலக புற்றுநோய் எதிர்ப்புக்கழகம்'' என்ற அமைப்பின் ஏற்பாட்டில் உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பணக்கார நாடுகளின் நோய் என்று முன்னர் கருதப்பட்டுவந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிகமோசமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. இந்நோயினால் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவோர், உயிரிழப்போரின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்ந்து விடும் நிலை காணப்படுகிறது.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய இயக்குனர் ஷின் யங் சூ வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் 1.7 கோடியை தாண்டிவிடும். இந்த 2010 ஆம் ஆண்டில் மட்டும் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 76 இலட்சத்தையும் விட அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். உலகில் 8 பேர் இறந்தால் அவர்களில் ஒருவர் புற்றுநோயால் இறக்கிறார். ஆண்டு தோறும் உலகம் முழுவதும் சுமார் 1.2 கோடிப் பேருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ள ஷின் யங் சூ, புற்றுநோய் மரணங்கள் தவிர்க்கப்படக் கூடியவை என்றும் கூறுகிறார்.

இன்று உலகில் மனித உயிர்களைப் பறிப்பதில் புற்றுநோய் தான் முதலிடம் வகிக்கிறது. ஒரு வருடத்தில் 76 இலட்சம் பேரின் உயிரினைக் குடிக்கும் இந்நோய் இன்னும் சில வருடங்களில் இந்த எண்ணிக்கையை 1.7 கோடியாக உயர்த்தவுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து எதிர்வரும் 2015 ஆம் ஆண்டுவரை புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை 8 கோடியாக இருக்குமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதேவேளை, சிகரெட் புகைப்பதனால் புற்றுநோய் ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டு மட்டும் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் பேராகவும் அதேயாண்டு உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் மட்டும் இரண்டு இலட்சம் பேராகவும் உள்ளது. புற்றுநோய் குறித்து உலகளாவிய ரீதியில் பேரச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் புற்றுநோய்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவையாகவேயுள்ளன. புகைபிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தல், போதைப் பொருட்களை தவிர்த்தல் போன்ற அடிப்படை விடயங்களின் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து விடமுடியும்.

எனவே வளரும் நாடுகள் உள்பட அனைத்துலக நாடுகளில் புற்றுநோய் தொடர்பாக மக்கள் மத்தியில் காணப்படும் அறியாமையை போக்குவதுடன் புற்றுநோய் குறித்த சிகிச்சைக்கான வசதிகளை மேம்படுத்தி மக்கள் மத்தியில் நோய் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி விட்டால் புற்றுநோய் மரணங்களில் 50 வீதத்தையேனும் தடுக்க முடியும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் அரைவாசிக்கும் அதிகமானோர் நோய் முற்றிய நிலையிலேயே தமக்கு புற்றுநோய் இருப்பதை தெரிந்து கொள்கின்றனர். எனவே இது தொடர்பில் மக்களும் கவனம் செலுத்தி தமக்கு ஏற்படும் நோய்களின் போது வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் காலதாமதம் செய்யாது உடனடியாகவே மருத்துவமனைகளை நாடவேண்டும். இது விஷயத்தில் நாம் மெத்தனமாக செயற்பட்டால் போவது நமது உயிராக இருந்தாலும் நாளை பாதிக்கப்படப் போவது நமது குடும்பம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருந்தால் உலகை அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயான புற்றுநோயிலிருந்து எம்மையும் எமது குடும்பத்தையும் ஒட்டுமொத்தத்தில் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளை மறப்போம்... புற்றுநோயை இல்லாமல் செய்வோம்.

கருத்து உதவி: தினக்குரல்

திங்கள், பிப்ரவரி 01, 2010

தேடிக் கொண்டிருக்கிறேன்!


தேடிக் கொண்டிருக்கிறேன்
என்றோ நான் கடந்த
என் பாலப் பருவத்தை

தேடிக் கொண்டிருக்கிறேன்
பள்ளிக்கொட்டடியில்
பழகியிருந்த என் தோழர்களை

தேடிக் கொண்டிருக்கிறேன்
ஒற்றைக் கொட்டடியில் இருந்து
பிரிந்து கிடக்கும் உடன்பிறப்புகளை

தேடிக் கொண்டிருக்கிறேன்
அம்மா ஊட்டிய பிடிசோறு
இன்றும் கிடைக்குமா

தேடிக் கொண்டிருக்கிறேன்
தள்ளி நின்றே எனைப்பார்க்கும்
தந்தையிடம் அன்பை

தேடிக் கொண்டிருக்கிறேன்
இல்லறத்தில் எப்படி
நல்லறம் நடத்தினார்கள் என்று

தேடிக் கொண்டிருக்கிறேன்
என் மகனையாவது எப்படி
நல்லவனாய் வளர்ப்பது

தேடிக் கொண்டிருக்கிறேன்
உழைப்பின் எல்லை
எனக்கு எதுவரையென்று


தேடிக் கொண்டிருக்கிறேன்
ஒழுக்கமான சமுதாயத்தில்
எனக்கும் ஓரிடம்

தேடிக் கொண்டிருக்கிறேன்
இன்னும் நான்
நானாகத்தான் இருக்கிறேனா?