'அண்ணனை' பார்க்க வந்துட்டாருல்ல! இனி அவருக்கு ஏத்தம்தான். மாப்ளே இப்பவே நாமளும் ஆளுக்கு ஒரு பூமாலை வாங்கியாந்து 'அண்ணனுக்கும்' 'அவருக்கும்' போட்டுடுவோம். நாளைக்கு கட்சி மாறிப்போனாலும் நம்மளையும் அரவணைச்சுக் கொண்டு போய்சேர்த்திடுவாரு அவரு. போறப்போக்கப் பார்த்தா இனிமே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகங்கிறது 'அண்ணன் திராவிட முன்னேற்றக் கழகம்'னு ஆகிடும் போல...
மதுரையில் அழகிரியை, அ.தி.மு.க. எல்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் சந்தித்து 'தன் கோரிக்கை'மனு அளித்தபோது இப்படித்தான் பேசியிருப்பார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
அனிதா ராதாகிருஷ்ணன் சொன்னபடியே முதலில் ராதாகிருஷ்ணனை இழுத்து வந்து நிறுத்தி விட்டார். இனிமேலும் தென்மாவட்டங்களில் உள்ள ரத்தத்தின் ரத்தங்கள் உடன்பிறப்புகளாக சங்கமிக்கும் நாள் வெகுதூரமில்லை.... இது நம் கண்முன் தற்போது நடைபெறும் காட்சிகள்... இந்தக்காட்சிகளின்கோர்வை நாளைய ஒரு முக்கிய பிரிவுக்கான அசைன்மெண்டாக கூட இருக்கலாம்.
அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கப்போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் தகப்பன்சாமி, அதற்கு முன்னால் தன் வாரிசுகளுக்கிடையே நடந்து கொண்டிருக்கும் அரசியல் கௌரவத்துக்கான பனிப்போரை எப்பாடுபட்டேனும் முடிவுக்கு கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
தகப்பன் சாமியின் பங்கீடு ஏதாவது வில்லங்கமாகாது, அப்படி வில்லங்கமாகி விட்டால் நாளையே கட்சியிலிருந்து வெளியேறி புதிதாக ஒரு கட்சி அமைப்பதைக் காட்டிலும் இப்போதே இன்னொரு கட்சியின் தளகர்த்தாக்களை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து கூடிய விரைவிலேயே அந்த கட்சியையே தனது கட்சியாக்கும் தொலைநோக்கு(?) சிந்தனையின் வடிவம்தான் தற்போது அரங்கேறி வரும் ஆள்பிடிப்பு வேலைகள்.
அரசியல் வியாபாரி பணத்தை தன்னிடம் வைத்துக் கொண்டே இருந்தால் வளர்ந்து விடாது. அதை தன்னை நாடிவருபவருக்கு பங்கிட்டுக் கொடுத்து வட்டியும் முதலுமாக கொடுத்தவனிடம் இருந்து அவன் கையாலேயே தரவைக்கும் யுக்தி படைத்தவனாக இருக்க வேண்டும்.
போயஸ் வியாபாரிக்கு இந்த சூட்சுமம் தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் அருகிருக்கும் சிலர் சில்லறையை வெளியே கொண்டுவர விரும்பவில்லை.
ஆனால் 'அண்ணன்' இன்றைய முதலீட்டை நாளைய வருமானமாக்கி அரசியல் அஸ்திவாரத்தை திடப்படுத்திக் கொண்டு வருகிறார். தம்பியின் கவனத்தை பதவிக்கான காய்நகர்த்துதலிலேயே இருக்கிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்... அரசியல் பீடம் அண்ணனிடமா? தம்பியிடமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக