புதன், ஜூலை 30, 2008

மிஃராஜ் இரவு


புனிதமிகு மிஃராஜ் இரவு
இஸ்லாமியர்களின் புனிதமிகு மிஃராஜ், பரா அத் இரவுகளில் இன்று மிஃராஜ் இரவு கடைப்பிடிக்கப்படுகிறது. மிஃராஜ் இரவு என்பது மாநபி (ஸல்) அவர்கள், இறைத்தூதர் ஜிப்ரயீல் (அலை) அவர்களுடன் சென்று அல்லாஹ்வை சந்தித்து, தொழுகை முறையை கற்று வந்து நமக்காக தந்த நாள் ஆகும்.
இந்த் அற்புதப் பயணமானது இரண்டு இடம் சம்பதமானது. மக்காவின் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பாலஸ்தீனத்துக்கும், மஸ்ஜிதுல் அக்ஸா வரையீலும், அங்கிருந்து அல்லாஹ்வின் அர்ஷ் வரையிலும் சென்று வந்ததாகும்.
மக்காவிலிருந்து, பாலஸ்தீனத்துக்கு நபியவர்கள் காலத்தில் சென்று வரவே 2 மாதங்கள் பிடிக்கும். அல்லாஹ்வின் அர்ஷை அறிந்தவர் மாநபியைத் தவிர யாருமில்லையே. ஆனாலும் இந்த நிகழ்வுகள் ஒரு மைக்ரோ செகண்ட் எனப்படும் நேரத்திற்குள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. முகமது அவர்களின் 53ம் வயதில் நபித்துவம் பட்டம் பெற்று 13ஆண்டுகள் நிறைவு பெற்ற பின் நடந்த சம்பவமாகும் இது.
அபூதாலிப் அவர்களின் மகளார் உம்முஹானி அவர்களின் வீட்டில் நித்திரையில் இருந்த முகமது நபியை இருவானவர்கள் வந்து அழைத்துச் சென்றனர். அவர் நபியை மஸ்ஜிதுல் அக்சாவிற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்துதான் அல்லாஹ்வை காண்பதற்கான விண்ணேற்றப் பயணம் நடைபெற்றது. அப்போது நபிகள் 7வானங்களைத் தாண்டிச் சென்றார். அவருடன் இருந்த இறைத்தூதர் ஜிப்ரயில்(அலை) அவர்கள் ஸித்ரதுல் முன்தஹா என்ற இடத்தைக் கடக்கும்போது நபிகளின் கரம்பற்றி அவரை மட்டும் தனியே விட்டார். அங்கிருந்த நபிகள் அல்லாஹ்வின் அர்ஷை சென்றடைந்தார். படைத்தோனைப் பார்க்கும் பெரும் பேறு நிகழ்ந்ததை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
அங்குதான் வணக்க முறைகள் நபிகளுக்கு கற்பிக்கப்பட்டது. அதுவும் ஒரு நாளைக்கு 50வேளை தொழுகை செய்ய டும் என்று முதலில் வல்ல நாயன் கூறினான். அதை ஏற்றுக்கொண்டு திரும்பும் போது, ஆதம் (அலை) அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மீண்டும் மீண்டும் அல்லாஹ்விடம் சென்று கேட்டு தொழுகை வேளையை ஐவேளையாக மாற்றி வந்தார்கள்.
அன்றிலிருந்து நபிகள் தொழுகையை முறையாக தன் சஹாபாக்களுக்கு கற்றுத் தந்து, வழிவழியாக நாமும் பின்பற்றி வருகிறோம்.
தொழுகை நம்மை வந்தடையக் காரணமான மிஃராஜ் இரவில் உளத்தூய்மையுடனும், நம்பிக்கையுடனும் வல்ல நாயனை தொழுது வந்தால், நமது வணக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அல்லாஹ்வின் அருள் நமக்கும் கிடைக்கும்.
இந்த இரவில் அதிகமதிகம் தொழுது நல்ல அமல்களை புரிவோம். இந்த இரவில் மட்டும் அல்லாது இனிவரும் நாட்களிலும் இன்ஷா அல்லாஹ் ஐவேலை தொழுகையையும் நாம் தொழ இறைவன் அருள்பாலிப்பானாக! ஆமீன்.

செவ்வாய், ஜூலை 29, 2008

குருதி குண்டு

டிக் டிக் டிக்....
கடிகார ஓசைகூட
எங்களை இப்போது
கதிகலங்க
வைக்கிறது!
நான்கு திசையில்
நடக்கும்
குண்டு வெடிப்புகளால்!

பாதகம் செய்பவருக்கோ
பாரெல்லாம் தொடர்பு
பாதிக்கப்படுபவனுக்கோ
பக்கத்து வீட்டுக்காரன்
யார் எனத் தெரியவில்லை!
நாகரிக இடைவெளிகள்...

நதிநீர் இணைப்பு
சாத்தியமில்லை..?
குருதியால்
இணைக்கிறது
குண்டுவெடிப்பு!

நமக்குள் இருக்கும்
பிரிவுகளே
நம்மை இன்னும்
பிரிக்க உதவுகிறது!
ஒன்று படுவோம்
இந்தியராய்!

பிடியுங்கள், அழியுங்கள்
தீவிரவாதிகளை!
தயவு செய்து
அழைக்காதீர்கள்
அந்த நாய்களை
'முஸ்லிம்' என்று!
இஸ்லாம்
போதிக்கவில்லை
மததுவேஷத்தை,
ஆதரிக்கவில்லை
தீவிரவாதத்தை!

ஞாயிறு, ஜூலை 27, 2008

ரைட்கால்!

சென்னையை கலக்கிய சைக்கோ கொலைகாரன் பிடிபட்டான்... போலீஸ் கமிஷனர் பெருமிதம்.... பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் வெளியான செய்தி படித்ததும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். குறிப்பாக செக்யூரிட்டிகள்.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனருக்கு பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்தன.
டிரிங்....டிரிங்.... கதறிக் கொண்டிருந்த டெலிபோனின் ரிசிவரை காதருகே கொண்டு செல்ல கரகர குரல் கீறிச்சிட்டது.
என்ன கமிஷனர் எந்த மாங்கா மடையன்மாட்டினான். சைக்கோன்னு முத்திரை குத்தி உள்ள அனுப்பிட்டு பந்தாவா இருக்கீங்க. இனிமே போலீஸ்காரங்க என்ன செய்றாங்கன்னு யாரும் கேட்கப்போறதில்ல. அடுத்தாப்ல ஏதாவது புதுசா தொடர்கொலைன்னு கேஸ் வந்தாத்தான் உங்களுக்கு வேலை. அதுவரைக்கும்...
டேய் யார்டா பேசுறது... கமிஷனர் கத்தலில் எதிர்முனையில் ரிசீவர் சாத்தப்பட்டது.
டிரேஸ் செய்து பார்த்ததில் சைக்கோ கொலைகள் நடந்ததாகக் கூறப்படும் வடபழனி ஏரியாவின் ஒரு பப்ளிக் பூத் நம்பர் என்று தெரிந்தது.
காவல்துறை இரவும் பகலும் முடுக்கி விடப்பட்டது...
டேய் நில்லுடா... நீ யார்... போலீஸ்காரர்கள் மடக்கியது ஒரு குல்பி வியாபாரியை.
சார், நான் இந்த ஏரியாத்தான் சார். குல்பி வியாபாரம் செய்ய ராத்திரிக்கு தான் சார் வருவேன்.
சரி, சரி போய் வியாபாரத்தை பாரு. நாங்க வேற ஒருத்தனை தேடிக்கிட்டு இருக்கோம்.
தேடுங்க... தேடுங்க... தேடிக்கிட்டே இருங்க. போலீஸ்காரங்க ஒழுங்கா ரோந்து வந்தாத்தானே நாங்களும் திருட்டு பயம், வழிப்பறி இல்லாம நிம்மதியா வியாபாரம் பண்ண முடியும். கமிஷனரை கொஞ்சம் கலக்கிய தைரியத்தில் குல்பி வியாபாரி தன் வியாபாரத்துக்கு சென்று கொண்டிருந்தான்.

புதன், ஜூலை 23, 2008

அமாவாசையும், அப்துல் காதரும்.

அப்பாடா, ஒரு வழியா பிரதமர் மன்மோகன்சிங் அரசாங்கம் தப்பிச்சுட்டுது. அமெரிக்காவும், அனில் அம்பானியும் நிம்மதியாயிட்டாங்க.
அமெரிக்கா... அனில்....
இது என்னடா அமாவாசைக்கும், அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம்.
முதல்ல அமெரிக்கா...
சோனியாவின் கைப்பாவை மன்மோகன்சிங் பிரதமரா இருக்கும்போதே, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டால் பிரச்னை இருக்காது.
இந்திய அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானால் கிட்டத்தட்ட வருஷத்துக்கு ஆறு லட்சம் கோடி ரூபாய் அமெரிக்காவுக்கு வருமானம்.
இந்தியா அணுகுண்டு சோதனை செய்யக்கூடாதுன்னு தடை விதிக்கக் கூடிய அளவுக்கு இலைமறை காயாக சில விதிகளை இதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் தகவல்களால், இந்திய அணுகுண்டு தயாரிக்க முடியாது.
சீனாவை கண்ட்ரோல் பண்ணனும்னா அதுக்கான இறங்கு தளமா இந்தியாவை பயன்படுத்திக்கொள்ளலாம்னு ஒரு மாஸ்டர் பிளான்.(ஏற்கனவே பாகிஸ்தானுக்குள் தளம் அமைத்து அங்கே இருந்து நம்மை கட்டுப்படுத்த முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது தெரியும்)
இன்னும் என்னென்னவோ இருக்கு. இப்போதைக்கு போதும்.
மன்மோகன்சிங் காப்பாற்றப்பட்டதால அமெரிக்காவுக்கு லக்கு.
அடுத்து அனில் அம்பானி!
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்லுவாங்க. இங்க உடன்பிறப்புங்க சண்டையால இந்தியாவையே பிரிச்சி மேஞ்சிட்டு இருக்காங்க.
யார் பெரியவன்ங்கிற அதிகார ஈகோவால், மன்மோகன் அரசைக் காப்பாற்ற தன் அண்ணனை ஆளுமையைக் காலி பண்ணக் கோரியிருக்கிறார் அனில் அம்பானி. இவருக்கு ஆதரவா முலாயம் சிங்.
ஆதரவுக்கு அட்வான்ஸா முகேஷ் அம்பானி, தன் மனைவிக்கு வாங்கிக் கொடுத்த முன்னூறு கோடி ரூபாய் விமானத்தை அரசாங்கம் பறிமுதல் செஞ்சிருக்கு.
இப்போது ஜெயிச்சாச்சு. இனிமே முகேஷ் அம்பானியோட தொழில் நிலையங்கள் பாதிக்கப்படலாம்.
அனில் அம்பானி தன்னுடைய தகவல் தொடர்பு தொழில் விஷயத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கையில், முகேஷ் அம்பானி முட்டுக்கட்டை போட்டிருந்தார்.
இனிமே அப்படியிருக்காது. அனில் பையா, சும்மா சரமாரியா தொழிலில் புகுந்து லாபம் சம்பாதிக்கலாம்.

இப்போ தெரிஞ்சிருக்குமே அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம்.
என்ன ஒரு சின்ன வருத்தம்,, குதிரை பேரம் நடந்ததா சொல்றாங்க... ஆனால் பாராளுமன்ற வளாகத்துல நிறைய பச்ச கல்யாணிகள் இருந்ததா சொல்றாங்க

வியாழன், ஜூலை 17, 2008

உனக்குள்ளும்

குறிப்பு: இது யாரையும் குறிப்பிடுவது அல்ல!


இன்னும் சில நிமிடங்கள் தான். சாத்தான்குளம் பேருந்து நிலையத்தை வண்டி அடைந்து விடும். அப்புறம், அழைக்கும் ஆட்டோக்கார நண்பர்களுக்கு முறுவலிப்புடன் வேண்டாம் என்று தலையை ஆட்டி, பேக்கை கையில் மாட்டியபடியே ஊரை பார்த்தபடியே நடந்து வீட்டுக்கு செல்லலாம்...

புஷ்ஷ்ஷ்ஷ்.... பெரிய சீறலோடு பஸ்ஸின் டயரிலிருந்து காற்று பீறிட்டது. சாத்தான்குளம் கருகமேனி ஆற்று தரைப்பாலத்தில் வண்டி நின்று விட்டது.

இன்னும் ஒரு கிலோமீட்டர்தான் சாத்தான்குளம் பேருந்து நிலையம். லேசான எரிச்சல் மனநிலை இருந்தாலும், பரவாயில்லை இங்கேயிருந்தே ஊரைச் சுற்றிப்பார்த்தபடி புளியடி மாரியம்மன் கோயில் வழியாகச் சென்று, நான் படித்த தூய இருதய மேல்நிலைப்பள்ளியையும், தூய இருதய மாதா ஆலயத்தையும் பார்த்தபடியே என்னுடைய வீடிருக்கும் வடக்கு பள்ளிவாசல் தெருவுக்கு சென்று விடலாம் என்று நடக்கத் தொடங்கினேன்.

முன்னதாக பஸ்சிலிருந்து இறங்கிய உடனேயே வீட்டுக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்து விட்டேன்.

அந்த கரிசல் பூமியின் வெம்மையை மனதுக்குள் ரசித்தபடியே நடக்கத் தொடங்கினேன்.

புளியடி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான விளையாட்டுத் திடலில் உடற்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியுமாக சிலர் இருந்தார்கள்.

என்னைப்பார்த்து விட்டு ஒருவன் ஓடி வந்தான். மக்கா எப்படி இருக்கே.

பார்த்திபன்.

மிகவும் நல்ல நண்பன், இயற்கையின் ரசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதால் படிப்பில் கொஞ்சம் தள்ளி நின்றே கவனிப்பவன்.

ஏழாம் வகுப்பு படிக்கும்போது, வகுப்பறையில் ஒரு நீர்க்குருவி கட்டிய கூட்டை , அதிலிருந்து குஞ்சுடன் எடுத்துக்காட்டி, அதற்கு இறையளித்து அந்த இடத்திலேயே அப்படி வைத்தவன்.

குளத்துக்கருகே இருந்த குட்டையில் எனக்கு மீன்பிடிக்க கற்றுத்தந்தவன். சனி, ஞாயிறுவிடுமுறைகளில் குளத்து வழியாக அமுதுண்ணாக்குடி வரை நடந்தே சென்று குருவி, கிளி, கொக்கு பிடித்து வந்ததை பெருமையாகச் சொல்லும்போது, எனக்குள் கோபம் வரும். நம்ம வாப்பா, அம்மா நம்மள எங்கயும் போக உடமாட்டேங்குறாங்க. ஒருநாள் கஷ்டப்பட்டு தெப்பக்குளத்துல குளிக்கிறதுக்கு அனுமதி கெடச்சும், கையில பிளாஷ்டிக் மக்கோட தெப்பக்குள படியில நின்னு குளிச்சதை, என் கூடப்படிச்ச பசங்க பார்த்து கிண்டல் பண்ணுனதை இப்ப நெனசாலும் கொஞ்சம் அவமானமாத் தான் இருக்கும்.

.... மக்கா, என்னடா நான் கேட்டுக்கிட்டு இருக்கேன் பதிலக்காணம்.

நிகழ்காலத்துக்கு வந்த நான், நண்பனைத் தழுவிக் கொண்டேன்.

என்ன பார்த்தீபா, எப்படி இருக்கே. என்ன பண்ற, வீட்டுல எல்லோரும் எப்படி இருக்காங்க...

இதுவரை பார்க்காத ஒரு விரக்தியான சிரிப்பு பார்த்திபனின் முகத்தில் இருந்தது.

அவனது வார்த்தைகளில் கலந்து வந்த போதை வஸ்துவின் வாடை அவனுக்குள் சோகம் கப்பியிருப்பதை எனக்குள் அறிவுறுத்தியது.

மக்கா, திருப்பூரில் போய் வேலை பார்த்தேன். சம்பாதிச்சு குடும்பத்தைத் தான் காப்பாத்தினேன். கல்யாணமும் செஞ்சு வச்சாங்க. என்ன பண்றது நம்ம சம்பாத்தியத்துக்குள்ள குடும்பம் நடத்துற வகை தெரியல என் சம்சாரத்துக்கு. சண்டை சச்சரவுதான். கோபிச்சுட்டு அவங்க அப்பா வீட்டுலபோய் உட்கார்ந்துக்கிட்டா. சமாதானம் பண்ணிக்கூப்பிட்டும், பிறந்த வீட்டு சொகுசு வாழ்க்கைக்காக அங்கயே உட்காந்துட்டா. சரி பிள்ளைய பார்க்கலாம்னு போனாலும், காட்ட மாட்டங்குறா.

பிள்ளைய அவளே பாத்துக்கிடட்டும்னு, நான் ஊருக்கு வந்துட்டேன். இங்க வந்தா எல்லோரும் என்னையத்தான் சத்தம் போடுறாங்க.

வெறுப்பாயிட்டு மக்கா. திரும்பவும் வேலைக்கு போனா, வேலைக்கு சேக்கமாட்டேனுட்டாங்க. அதான் இப்ப நம்ம ஊருலேயே சந்தை யாபாரத்துக்கு போய்ட்டு வர்றேன். திங்கள் கிழமை உடன்குடி சந்தை, செவ்வாய் கிழமை நாசரேத், வியாழக்கிழமை நம்ம ஊரு, வெள்ளிக்கிழமை திசையன் விளை. நாலு சந்தைக்கு போனாலும் காசு வந்துருது.

பிள்ளைக்கு காசு கொஞ்சம் அனுப்பிட்டு, மீதிய என் கையில வச்சு செலவழிச்சிட்டு இருக்கேன் மக்கா...

ஏல பார்த்திபா, முள்ளுச்செடி புதருக்குள்ளயிருந்து சத்தம் வர, மக்கா நாளைக்கு பார்க்கலாம்னு சொன்னபடியே, பார்த்திபன் ஓடினான், கொஞ்சம் இருக்கும் அந்த வஸ்துவையும் சுவைத்துவிட...


பார்த்திபனை பார்த்து மனம் வருத்தப்பட்டது.

என்ன பார்த்திபன் தண்ணி அடிக்க ஆரம்பிச்சுட்டான், நான் பதிவு போட ஆரம்பிச்சிட்டேன். ஆனாலும் என் மனைவி, என் பிள்ளை என் கூடத்தான் இருக்காங்க.

சோகம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையில்.

செவ்வாய், ஜூலை 15, 2008

சும்மானாச்சுக்கும்!

அந்தப் பெரிய குளக்கரை அருகே வந்து நின்றார்கள் குருவும் சிஷ்ய கோடிகளும். குரு சொன்னார், இந்த குளத்தின் தண்ணீரில் தன் உடுப்புகள் நனையாமல் அக்கரை செல்ல வேண்டும்.
குரு சொன்னதும் சிஷ்யர்கள் குழம்பிப் போய் நின்றனர். எப்படிக் குருவே தண்ணீரில் உடுப்புகள் நனையாமல் செல்வது.
குரு மவுனத்தை மட்டுமே மொழியாக்கி விட்டு அக்கரைக்கு சுற்றிவந்து நின்று கொண்டார்.
சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்த சிஷ்யக்கோடிகளில் இரண்டுபேர் ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைத்துக் கொண்டனர்.
தங்கள் வேட்டிகளைக் களைந்து ஒருவருக்கொருவர் மாற்றி உடுத்திக் கொண்டு குளத்துக்குள் இறங்கி நடந்து கரையேறினார்கள்.
குருவே குளம்பிப் போனார்.
அந்த இரண்டு சிஷ்ய கோடிகளும் சிரித்தபடியே குருவிடம் வந்து, குருவே
தன் ஆடை நனையாமல் தானே கரையேற வேண்டும் என்றீர்கள். அதனால் தான் எங்களுக்குள் ஆடையை மாற்றிக்கொண்டு அவன் ஆடையை நான் நனைத்தேன். என் ஆடையை அவன் நனைத்தபடி நடக்க முடிந்தது என்ற்னர்.
குரு சிஷ்யர்களை நோக்கி பெருமிதத்துடன், எப்படியோ நீங்கள் எதிர்காலத்தில் மிகச்சிறந்த அரசியல்வாதி ஆவீர்கள் என்று அவர்களை ஆசீர்வதித்தார்.
உடனே, அந்த இரண்டு சிஷ்ய கோடிகளும் குருஅணிந்திருந்த வஸ்திரங்களையும் , அவர் வைத்திருந்த பொருட்களையும் அள்ளிச் சுருட்டியபடியே, அரசியல் வாழ்க்கைக்கு உங்களிடமே அச்சாரம் போடுகிறோம் என்றபடியே அந்த இடத்தை விட்டுக் கிளம்பினர்.
குரு அம்போ என்றபடி நின்றார்.


நீதி: அரசியல் வார்த்தை நுழைந்தாலே வாழ்வில் எல்லாம் பறியோகும்.

சனி, ஜூலை 12, 2008

பெருந்தலைவர் காமராஜர்!

வருகிற ஜூலை 15-ந்தேதி காமராஜர் அவர்களின் 105-வது பிறந்தநாள் விழா.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.

காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.

கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.

தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.

காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.

காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.

தந்தையொடு கல்விபோம் - என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.

காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..

தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.

1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.

1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.

இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி - பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் - இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.

கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.

அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.

1957 - ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.

பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.

”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.

பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.

விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.
நன்றி: பெருந்தலைவர் காமராஜர் வெப்தளம்