
"என் கணவர் கைது செய்யப்படவில்லை. இலங்கை அரசால் கடத்தப்பட்டுள்ளார். இன்று நான் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதேபோன்று நாளை ஏனைய பெண்களுக்கும் எனது நிலைமை ஏற்படக்கூடும். இந்த ஆபத்தான போக்கை எதிர்த்துப் போராட என்னுடன் அணிதிரளுங்கள்?" - பத்திரிகையாளர் சந்திப்பில் அனோமா பொன்சேகா கண்ணீருடன் உதிர்த்த வார்த்தைகள் இவை.
2009 மே நடுப்பகுதியில் புலிகளுடனான போர் முடிவடைந்தது என்று தென்னிலங்கையில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற போது கணவர் இராணுவத்தளபதி பொன்சேகாவை நாடு போற்றிப் புகழுவதைக் கண்டு பூரித்து நின்ற திருமதி பொன்சேகா ஒரு வருடகாலத்திற்குள் கணவருக்கும் தனக்கும் இந்த நிலைவருமென்று கனவிலும் நினைத்திருப்பாரா.................?
ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைத் தனது உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமான ஜெனரல் ஹவுஸுக்கு விருந்துக்கு அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். போர் தீவிரமடைந்திருந்த இறுதி இரண்டு ஆண்டுகளின் தொடக்கத்திலும் விருந்துபசாரங்களின்போது ஜெனரல் பொன்சேகா வேதாளம் ஒன்று புலியை மடக்கிப் பிடித்து வைத்திருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட மேலங்கியை அணிந்த வண்ணம் ஊடகவியலாளர்களுடன் போர் நிலைவரங்கள் பற்றி கலகலப்பாகப் பேசிக்கொண்டிருப்பார். தனது பேச்சில் இந்தப்போரை அடுத்த தளபதிகளின் கைகளில் விட்டுவிடப்போவதில்லை; தன் பதவிக்காலம் முடியும் முன்பு தாமே முடிவுக்கு கொண்டுவருவதாக பிரகடனப்படுத்தியிருக்கிறார்.
ஜெனரல் பொன்சேகா தான் கூறியவாறே போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு விட்டுவைக்காமல் தனது பதவிக்காலத்துக்குள்ளேயே அதை முடிவுக்குக் கொண்டுவந்தார். ஆனால், தனக்கு அடுத்ததாக இராணுவத் தளபதியாகப் பதவியேற்கக் கூடியவர் தன்னைக் கைது செய்து தடுத்துவைப்பதற்கான உத்தரவைப் பிறப்பிப்பார் என்று ஜெனரல் கனவிலும் நினைத்திருப்பாரா..................?
திருமதி அனோமா பொன்சேகாவிடம் ஒரு கேள்வி?
எங்கட காப்பாத்துங்கோ... என்று உலகமே கேட்க ஒப்பாரி வைத்த தமிழினத்தினத்தின் அழுகுரல் உங்கள் செவிகளில் எட்டவில்லையா... பத்துமாதம் சுமந்து பெற்று பசிக்கு மார்பமுது வழங்கும் நிலையில் பாஸ்பரஸ் குண்டுகளில் கருகிய தாய் சேயின் சதைக்கட்டையின் காட்சி உங்கள் கண்களில் கண்ணீர் வரவழைக்கவில்லையா... புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் பிறந்த சிசு முதல் இறப்பு நோக்கிய முதியவர் என தமிழினம் அழிப்பில் உங்கள் கணவர் 'கடமை' கருப்புக் கண்ணாடி அணிந்தபடி செய்த கொடூரங்கள் உங்கள் நினைவுகளில் இருந்து நீங்கி விட்டதா?
புலிகளை அழித்து விட்டோம் என்று கொண்டாடிவிட்டு இன்று தங்கள் மண்ணுக்குள்ளேயே நாடோடிகளாய் முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவது உங்களைப் போன்ற பெண்களுக்கெல்லாம் தெரியவில்லையா?
பதவிக்காகவும், பெயருக்காகவும் இந்தக் கொடுஞ்செயலைப் புரிந்து விட்டு பழியிலிருந்து தப்பிக்கவும், தன்னை காத்துக்கொள்ளவும் அரசுக் கட்டிலில் ஏற முயன்று தேர்தலில் நின்று தோற்றுப் போனவர் உங்கள் கணவர். இன்று ஆளும் வர்க்கம் தன் இனத்தையே வேட்டையாடத் தொடங்கி இருக்கிறது. உங்கள் கணவருக்கு ஒன்று என்றவுடன் ஒப்பாரி வைக்கிறீர்கள்... ஊர்ப் பெண்களையெல்லாம் உங்களுக்கு ஒத்துழைக்க அழைக்கிறீர்கள்... நாளைக்கு உங்களுக்கும் இந்த நிலை வரலாம் என்று ஆரூடம் செய்கிறீர்கள்...
தமிழினம் கதறும்போது, பெண்கள் அங்கே மானபங்கம் செய்யப்பட்டபோது, நம்மினம் (பெண்ணினம்) என்று அந்த அபலைத் தமிழ்ப் பெண்களுக்காக நீங்கள் செய்தது என்ன? சிதறிச் செத்த சிசுக்களுக்காக நீங்கள் செய்தவை என்ன?
இந்தக் கேள்வி அனோமா பொன்சேகாவுக்கு மட்டுமல்ல, அதிகார வர்க்கத்து குடும்பப் பெண்கள் அனைவருக்கும்தான். ராணுவத்தில் தன் கணவனை, மகனை, தம்பியை, தந்தையை என்று பணிக்கு அனுப்பியிருக்கும் ஒவ்வொரு சிங்களப் பெண்ணினத்துக்கும்தான். தவறிழைக்கும் ஆண்களை திருத்துவதில் பெண்களின் பங்குதான் அதிகம் இருக்கிறது. உங்கள் பங்களிப்பை நீங்கள் ஒழுங்கே செய்திருந்தால், போர் என்ற பெயரில் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது. வினையை விதைக்காமல் வினையை அறுக்காமல் இருந்திருக்கலாம்....
இனிமேலாவது சிந்தியுங்கள்... முகாமில் இருக்கும் தமிழர்களுக்கான வாழ்க்கையாவது மலர்ச்சி அடையட்டும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக