
ஒருத்தன் வேணும்னா அவனைத் தாங்குறதும், வேண்டாம்னா பொத்துன்னு தூக்கி கீழப் போடுறதும் மனித இயல்பு. ஒருத்தன் மேல அவன் நல்லவன்னு நம்பிக்கை வச்சி வாழ்த்துறதும், அவனோட தப்பான சகவாசம் எப்போவாவது தெரியவந்துச்சுன்னா ச்சீய்... அவனப் போயா இவ்வளவு நாளா நம்பிக்கை வெச்சிருந்தோம்னு தனது நம்பிக்கை தவறானதை ஏற்கமுடியாத கோபத்தை அவன் மீது காட்டுவதும் கூட மனித இயல்புதான் போலும்.... சமீபத்தில் ஊடகங்களால் பரவலாக கடை விரிக்கப்பட்ட சுவாமி நித்யானந்தா விவகாரமும் இப்படித்தான்.
சிறுவயதிலேயே துறவறத்தை மேற்கொண்டு உபதேசங்களை வழங்கியும், யோகாசனங்களை செய்யச் சொல்லியும், மனதை ரிலாக்ஸாக்கும் சில பல நூல்களை வெளியிட்டும் தன் பெயரையும், பேங்க் பேலன்ஸையும் சொத்துக்களையும் குவித்து கொண்டவர் இந்த நித்தியானந்தா.
தனக்கான ஆறுதல் வார்த்தைகளை, தன் உள்ளத்துக்கான அமைதியை தேடும் சிலர், பலருக்கு அந்த ஆறுதல் வார்த்தைகளை, அமைதியை தருபவன் தெய்வமாக, தன்னை வழிநடத்துபவனாக தெரிவதில் ஆச்சர்யமில்லை. அந்த நியதியில்தான் நித்தியானந்தாவின் வார்த்தைகளும், போதனைகளும் தனக்கான வழிகாட்டுதலாக நினைத்தவன் அவரை தெய்வமாக்கிக் கொண்டான்.
தன்னை தெய்வமாக்கிக் கொண்ட பக்தனிடமிருந்து காணிக்கையாக பெற முடிந்ததையெல்லாம் பெற்ற நித்தியானந்தாவுக்கு சொத்துக்கள் குவிந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை.
நேர்மை, நீதி, நியாயம், சத்தியம், தர்மம் என்று ஊருக்கு உபதேசம் சொன்னவரை கடவுளாகப் பார்த்தவன், உபன்னியாசத்தை மட்டும் பார்க்காமல் அவருக்குள்ளும் ஊடுருவிப் பார்த்தபோது தெரிந்ததுதான் அவரது மறுபக்க லீலைகள்.
தன்னை நித்தியானந்தா பாலியல் வல்லுறவு கொண்டதாக இன்னும் யாராலும் புகார் தரப்படவில்லை. லீலையில் இருந்ததாக கூறப்பட்ட நடிகை ரஞ்சிதாவும், தன் கடவுளுக்கு தன்னையே காணிக்கையாக்கியதாக ஒப்புக் கொண்டு விட்டார்.
.............. ஆஹா ஓஹோ என்று நித்தியானந்தாவைப் தூக்கி வைத்தவர்கள் இன்று தொப்பென்று போட்டுவிட்டு ஆங்காரம் காட்டுகிறார்கள்.
காவி உடையில் சன்னியாசம் பேணும் ஒருவர், துறவி என்று முற்றும் துறந்தவராகக் காட்சி அளித்தவரின் இந்த செயல் அருவருப்பானதே. தன் மீதான பக்தர்களின் நம்பிக்கையைத் தகர்த்த செயல் தவறானது.
முற்றும் துறக்கவில்லை, இன்னும் சில இன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்றால் துறவறத்தை கைவிட்டு இல்லறத்தை மேற்கொண்டு கல்கி(?) சாமியார் போல் கணவன் மனைவியாக சமயச் சொற்பொழிவைத் தொடரலாம்..... சொத்து பத்துக்களையும் காப்பாற்றிக் கொள்ளலாமே...
இன்னொரு விஷயம்:
அமெரிக்காவில் தன்மனித ஒழுக்கம் சரியாக இல்லாவிட்டாலும் தங்களுக்கு தலைமையாக வருபவர் ஒழுக்கமாக இருக்க விரும்புவார்கள். ஆனால் இந்தியாவிலோ தனிமனித ஒழுக்கம் மட்டுமே முக்கியம், தலைமை எப்படியும் இருக்கலாம் என்னும் மனோபாவமே இருக்கிறது. இதனால்தான் தான் நேர்மையாக இருந்தாலும் தான் தேர்ந்தெடுக்கும் தலைமை - ஆன்மீகமானாலும் சரி, அரசியல் ஆனாலும் சரி அவர்களின் ஒழுக்கங்களை பார்ப்பதில்லை.
எப்படி மனித வாழ்வை ஆன்மிகம் நல்ல வழிக்கு திருப்புகிறதோ அவ்வாறே அரசியலும் நல்ல நெறியில் நடத்த வேண்டும். ஆனால் இங்கு ஆன்மிகமும் சரியில்லை, அரசியலும் சரியில்லை... நல்லக்கூத்து நடக்குது இந்தநாட்டில்...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக