திங்கள், செப்டம்பர் 28, 2009

என்று காண்போம் தமிழ் தீபஒளி!

அது ஒரு சர்வாதிகாரியின் ஆட்சி நடந்த நாடு ன்னுல்லாம் சொல்ல முடியாது. ஏன்னா அது ஒரு கிராமம். அங்க நெடுஞ்சாண் உயரமும், அகலமான தொப்பையும் கொண்ட ஒரு கிறுக்குப் பய நாட்டாமையா இருந்தான். பயதான் கிறுக்கே தவிர சொத்துபத்தெல்லாம் சாஸ்தி. அதனாலதாண்டா அவன் நாட்டாமை ஆக்குனாங்கன்னு நீங்க சொல்றது கேக்குது.
அந்த நாட்டாமை கிறுக்கனுக்கு ஒரு பழக்கம். தன் சொல்றபடிதான் ஊரே நடக்கணும், நான் கால சரிச்சு வச்சி நடந்தா, மத்தவனும் அப்படியேத்தான் நடக்கனும், நான் ஒரு கால தூக்கி வச்சிட்டு உச்சா போனா மத்தவனும் அப்படித்தான் போவனும்னு ஒரு சட்டம் வச்சிருந்தான். ஆனா இந்த சட்டத்துல ஒரு தள்ளுபடி என்னன்னா, நாட்டாமை குடும்பத்துக்காரங்களும், அவனுக்கு வேண்டப்பட்டவங்களும் இத கடைப்பிடிக்கனும்னு அவசியம் இல்லை. அதை நாட்டாமையும் கண்டுக்க மாட்டான்.
இந்த நாட்டாமைக்கு ஒரு பழக்கம் இருந்துச்சு. என்னன்னா, அந்த கிராமத்துல பொதுக்கிணத்து தண்ணியத்தான் அங்குள்ள மக்கள் எடுத்து வந்து குடிப்பாங்க. அவங்க கப்பி போட்டு வாளிய வச்சு தண்ணிய எறச்சி குடத்துல ஊத்தி தண்ணியக் கொண்டுபோவாங்க.
இந்த நாட்டாமை, காலைல வேப்பங்குச்சி வச்சிட்டு பல்துலக்கிட்டு வர்றவரு, சரியா தண்ணி எடுத்து வச்சிருக்கிர குடத்துக்குல்ல துப்பிட்டு போயிடுவாரு. எல்லாமக்களும் திட்டுனாலும், கண்டுக்காம சிரிச்சிக்கிட்டே போயிடும் அந்த கிறுக்கு.
இந்த கிறுக்குப்பய படுத்துற பாட்டுக்கு அவன் போய் சேர்ந்தாத்தான் சரியா இருக்கும்னு ஊரே நேரம் பார்த்துக்கிட்டு இருந்துச்சு.
எவனோ சின்னப்பையன் தின்னுபோட்ட வாழப்பழ தோல்ல நாட்டாமை வழுக்கு கீழே விழ, அந்த ரோடே பள்ளமாயிடுச்சு. அப்புறம் அவன கட்டில்ல கட்டி தூக்கியாந்து வீட்டுல வச்சிட்டாங்க.
ஊர்மக்கள்லாம் நாட்டாமை போயிருவாண்டு சந்தோஷமா இருந்தாங்க. என்னத்தான் கிறுக்கனா, இருந்தாலும் சாவும்போது நாட்டாமைக்கு மனசு மாறிச்சு. தன் மொவன கூப்பிட்டாரு, இதப்பார்றா, இவங்ககிட்ட நான் ரொம்ப கெட்டப்பேரு வாங்கிட்டேன். அதையெல்லாம் நீ தான் மாத்தனும், செஞ்சுருய்யாண்டு சத்தியம் வாங்கிக்கிட்டு டிக்கெட் வாங்கிட்டாரு நாட்டாமை.
வாரிசுப்படி, கிறுக்கு நாட்டாமை மொவன் நாட்டாமை ஆயிட்டான்.
சனங்கள்ளாம், எப்பாடி அப்பன் போயிட்டான். மவன் ரொம்ப நல்லவண்டா, இவன் அந்த கிறுக்குமாதிரி இருக்கமாட்டான்னு சொல்லி ப்பேசிக்கிட்டாங்க.
அடுத்த நாள், அந்த சின்ன நாட்டாமை வேப்பங்குச்சியால பல்துலக்கிட்டே வந்தான். கிணத்துப்பக்கம் வரவும், தண்ணி எடுத்து வச்ச பொம்பளைங்கள்ளாம், கொஞ்சம் கலக்கமாத்தான் இருந்தாங்க. வந்தவன் குடத்த பார்த்துவிட்டு திரும்பிட்டான். நல்லவேளை போயிட்டான்னு பொம்பளைங்க சொல்றதுக்கு முன்னாடியே அப்படியே கிணத்துக்குள்ளே துப்பிட்டான்.
டேய் இதுக்கு அந்த கிறுக்குப்பய நாட்டாமையே மேலடான்னு, தங்கள் விதியை நினைச்சிக்கிட்டு போயிட்டாங்க.......

யூதர்களை அழிப்பது ஒன்றையே நாட்டாமையா நின்று செஞ்சிக்கிட்டு வந்தவர் ஹிட்லர். வரலாற்றில் இன அழிப்பு படுகொலைகாரன்னு முதலிடத்தில் இருந்தவன் ஹிட்லர். ஆனா அவர் ரொம்ப நல்லவர்டா, நான் தாண்டா எல்லாத்துக்கும் மேலன்னு சொல்லிக்கிட்டு கிளம்பியிருக்காரு சிவப்புதுண்டு ராஜபக்சே... லட்சக்கணக்கான தமிழர்களை கொன்னு இன அழிப்பு செஞ்சி ஹிட்லரை விடவும் ஒரு கொடியவன் தான் தான்னு நிருபீச்சிக்கிட்டிருக்காரு.
ஏ! சர்வதேச தமிழ் சமூகமே, இந்த நரகாசுரனை வதம் செய்து என்று கொண்டாடப்போகிறாய் தமிழ் தீபாவளியை!