அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மமா... அடிவயிற்றில் கணவன் விட்ட உதை, அப்படியே வலியின் வார்த்தைகளாய் மாறி காற்றில் கலந்து விட்ட தன் தாயை கூப்பீட்டபடியே சுவரோரம் விழுந்தாள் மல்லிகா...
சுயநினைவுடன் இருப்பது கணவனின் தொடர்ந்த ஏச்சு அவளுக்கு நினனவூட்டியது.
ஏண்டி இவளே, இது ஒண்ணும் பட்டணம் இல்லடி... கிராமம். அதுவும் மலைக்கிராமம். கருக்கல்ல வெளிய போயிட்டு தாமசமா வந்தாலே காதுவச்சு, கண்ணு வச்சு பெருசா பேசுற ஜனங்கடி. நீ என்னடான்னு டவுனுக்கு வேலைக்கு போயிட்டு வருவேன்னு சொல்ற. அடியேய் நான் சம்பாதிச்சுக் கொண்டுவர்றது ஒழுங்கா வச்சு குடித்தனம் நடத்திக்கோ. இனியொருவாட்டி வேலைக்கு போறேன்னு சொன்ன மவளே சாக்குலகட்டிக் கொண்டுபோய் மலைக்குமேல வச்சு கொளுத்திவுட்டுட்டு வந்துருவேன்... வார்த்தைகளில் கொலைவெறியுடன் சாராய நெடியும் கலந்தே வந்தது.
ஏய்ய்ய்... இந்தாய்யா பெரிய துரை மாதிரி பேசுற... நீ சம்பாதிக்கிற காசு உனக்கு சாராயத்துக்கே பத்தாது... பேச்ச மட்டும் பாரு. யோவ்... நான் எவ்வளவு நாளும் பட்டினி கெடப்பேன். ஆனா புள்ளைங்க... நம்ம சுகத்துக்கு பெத்துக்கிட்டு அதுகலயும் வேதனப்படச் சொல்றியா.
ஏதோ எங்க அப்பனும், ஆத்தாலும் என்னை படிக்க வச்சமாதிரி அதுகளயும் நாலெழுத்து படிக்க வைக்கணும். அதுக்கெல்லாம் பணம் வேணும்யா. அதுக்குத்தான்யா வேலைக்கு போறன்னு சொல்றேன்...
ஏண்டி நாயே! நான் இம்புட்டு தூரம் சொல்லிக்கிட்டு இருக்கேன். எதுத்தா பேசுறே. உன்னைய வேலைக்கு அனுப்புனா ஊர்க்காரப்பயலுவ எம்மேலத்தாண்டு நாக்கு மேல பள்ளைப்போட்டு பேசுவானுவ. பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பு அந்தகாசுல குடிக்கானுன்னு சொல்லுவானுக. ஏய்... எங்குடும்பத்துல ஒரு பொட்டச்சி கூட வேலைக்கு போனதும் கிடையாது. இது மாதிரி பேசுறதும் கிடையாது. உன்னை... இப்படியே விடக்கூடாது. இந்த விறகுக்கட்டையை தூக்கிட்டு வந்து அடிச்சே கொல்லுற....
சாராயப் போதை அவன் கோபத்தை இன்னும் கொளுத்திப்போட கொல்லையில் கிடந்த விறகை எடுக்கப்போனவன் , கால்தடுக்கி கீழே விழுந்தான்.
அம்ம்ம்ம்ம்மா.... அவன் அலறலில் ஊரும் கூடியது. உறவும் கூடியது.
நல்லாத்தான் இருந்தான். பாவிப்பய போதையில கல்லு மேல விழுந்து நெத்திப்போட்டுல கல்லடிச்சு அங்கேயே செத்துப்போவான்னு யார் கண்டது. இனி மல்லிகாவுக்கும் அவ குழந்தைகளுக்கும் யாருதான் ஆதரவோ! சாவுக்கு திரண்ட கூட்டம் சல்லடை வார்த்தைகளை விதைத்துவிட்டுப் போனது....
.......... அம்மா, என்னம்மா சீக்கிரம் வந்துட்டீங்க.
மாலையிட்ட கணவனின் போட்டோ முன்பு முதல்மாதச் சம்பளத்தை வைத்தவள் நினைவலைகளில் இருந்து நனவுலகம் மீண்டாள்.