சனி, அக்டோபர் 27, 2007

சும்மா!

என் வாழ்விலும்
ஜொலிஜொலிக்குது
மின்மினிகள்...
நான் மட்டும்
கருவண்டாய்!

இருளில் மட்டுமே
வெளிச்சத்துக்கு
கூடுதல் மதிப்பு!

பகல் மட்டுமே
உலகம் இல்லை!

என்னையும் நேசிக்கிறாள்
அவள்... இரவில் மட்டுமே!
வெளிச்சத்தில்
நான் அவளுக்கு புரிவதில்லை

வியாழன், அக்டோபர் 25, 2007

தொடரும் வன்புணர்வுகள். விழிப்பது எப்போது?

சமீப நாட்களாக தமிழகத்தில் வன்புணர்வு நிகழ்வுகள் அதிகரித்து உள்ளது. அதுவும் 10 வயது சிறுமியை 14 வயது சிறுவன் வன்புணர்ந்தது, 13 வயது மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை 65 வயது முதியவர் வன்புணர்ந்தது, 12 வயது சிறுவனுடன் 35 வயது பெண்மணி உறவாடியது, 24 வயது மகனின் நண்பனுடன் உல்லாசமாக இருந்த 45 வயது பெண் என்றெல்லாம்... நாகரிகமாகி வரும் பட்டிணங்களில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் ஒருகாலத்தில் நிகழ்ந்தது. ஆனால் இன்று குக்கிராமங்களிலுக் இந்த அசிங்கங்கள் அரங்கேறச் செய்கிறது.

இந்த நிலைக்கெல்லாம் காரணம்... கூடா ஒழுக்கமும், கற்பு மறைத்தலும், பேராண்மை மறத்தலும் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இதையெல்லாம் தாண்டி மனக்குதிரையின் கடிவாளம் தன்னை அடக்கத் தெரியா மானிடரும், கண்ணுக்குள் புகுந்து மனதை மாற்றும் தொலைக்காட்சி தொடர்களே முக்கியப் பங்கு வகிக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நம்பி ஊரிலிருக்கும் ஒரு சில தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் கூட்டம் கூடும். ஆனால் இன்று நிலைமை வேறு.
வீட்டுக்கு வீடு கலர் டிவிப் பெட்டியே இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பஞ்சபூதங்களுக்கு அடுத்து கேபிள் கனெக் ஷன்தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
காலை10 மணிக்கெல்லாம் தொடங்கும் இந்த மெகா தொடர்கள் நம் மனங்களில் மெகா நிகழ்வுகளை நிகழ்த்தி விடுகிறது.
குடும்ப செண்டிமெண்ட் என்ற பெயரில் இரண்டு பொண்டாட்டி, கணவன் குடிகாரன், கணவன் கொலைக்கு பழிவாங்கும் மனைவி, தாய்க்கு உதவும் மகள், பணத்தைக் காட்டி பெண்களை வளைக்கும் வில்லன், பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன்னை இழக்கும் பெண், குறைந்தது 4 பெண்குழந்தைகள், வளர்ந்தபின் ஒருவருக்கொருவர் தினந்தோறும் சவால், சின்ன வயசில் அம்மா சோரம் போய் பிறந்த மகள் பெரியவளானதும் கேள்வி கேட்பாள், ................. இப்படித் தொடர்கிறது இந்த தொடர்கதைகள்.
மனசு ரிலாக்ஸாக இந்தத் தொடர்களை பார்ப்பதாகக் கூறிக்கொள்ளும் இவர்கள் மனதுக்குள் பாக்ஸ்பாக்ஸாக சமுதாயக் குற்றங்களை கொலுவேற்றி விடுகிறார்கள்.
விளைவு மேற்கூரிய வன்புணர்வு நிகழ்வுகளுக்கு சத்தமில்லாமல் அடித்தளமிடப்பட்டு விடுகிறது.

தொடக்கக் காலங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கைமுறையில் வீட்டில் பெரியவர்கள் இருந்து சிறியவர்களுக்கு வாழ்க்கையை வழிகாட்டி வந்தனர்.
ஆனால் என்று தனிக்குடித்தனம், ஆண் பெண் சம்பாதிக்கிறோம் அதனால் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளப்போகிறோம் என்று கிளம்பினார்களோ அன்றே பிடித்துவிட்டது இந்தப் பின்னடைவு.
இதை அகற்ற என்ன செய்யப்போகிறோம்.
தீர்வு நாளைப் பாருங்கள்.

சனி, அக்டோபர் 13, 2007

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்1

ரமலான்!
சக மனிதனின் பசியை தாகத்தை உணரும் உன்னத நடைமுறையை நமக்கு கற்பிப்பதற்காக இறையோன் ஏற்படுத்திய ஒரு மாதம் ரமலான். இறைவனை உணர்வோம்! இயற்கையோடு இணைவோம்.
அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!

சனி, அக்டோபர் 06, 2007

இவர்களுக்கு ஆதரவு யார்?

பிறந்தாலும் அரசியல்வாதி வீட்டு நாயாகப் பிறக்க வேண்டும். கிராமத்து சொலவடைக்கு அர்த்தம் இல்லாமல் இல்லை.
இன்றைய செய்தித்தாளில் ஒரு பிட் செய்தி. நடிகர் அர்ஜுன் வீட்டு வேலைக்காரர் மரம் ஏறும் போது விஷவண்டு கொட்டியதால் மரணம் அடைந்தார்.
மரணம் அடைந்தவரின் குடும்பத்துக்கு வருத்தம் தெரிவிக்கும் அதேவேளையில் செய்தியின் காரணமாக அந்த வேலைக்காரர் குடும்பத்துக்கு அர்ஜுன் ஏதாவது நஷ்ட ஈடு கொடுத்தால் சந்தோஷம்.
ஆனால் இன்று எத்தனை வேலைக்காரர்களின் மரணம் வெளியே தெரியாமல் நடந்து வருகிறது, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மறைக்கப்பட்டு வருகிறது.
ஒரு கட்டிடத் தொழிலாளியாக இருந்தாலோ, சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்தாலோ அவர்கள் தங்களுக்கென சங்கங்கள் அமைத்து தங்களைக் காத்துக் கொள்கின்றனர்.
ஆனால் வீட்டுப் பணியாளர்களுக்கான சங்கங்கள் என்பது இதுவரை இல்லை என்றே தெரிகிறது.( ஒருவேளை இருந்தால் எனக்கு தெரிவியுங்கள்.)
தனது வருமானநிலை தெரிந்து தன்னால் இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியும் என்கிற போதுதான் வீட்டுப் பணியாளர்களை நியமித்துக் கொள்கிறார்கள்.
எனவே, இவர்களிடம் வீட்டுப்பணியாளர்கள் தங்களின் வேலை அளவுக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகளைக் கேட்டுப் பெறமுடியும்.
இவர்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டால் அரசிடமிருந்து தங்களுக்கான நலவாரியங்களையும் அமைத்து கொள்ள முடியும்.

திங்கள், அக்டோபர் 01, 2007

பந்த் - தி.மு.க., அ.தி.மு.க. வெற்றி, மக்கள்?

சேது சமுத்திரத் திட்டத்துக்காக ராமர் பாலத்தை உடைக்கக் கூடாது என்று மதச்சாயம் பூசிய அரசியல் கட்சிகளும், அதற்கு ஒத்தூதும் கட்சிகளும் காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றன. இதையும் தாண்டி சாது வேஷத்தில் திரியும் சில கபடதாரிகள் தலையைக் கொய்வோம் என்று கர்ச்சிக்கவும் செய்து கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசோ வாயை மூடிக் கொண்டு மவுனம் காக்கின்றது. ஆனாலும் தமிழக மக்களின் வளத்தை கருத்தில் கொண்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியேத் தீருவது என்னும் திடத்தில் தமிழகத்தை ஆளும் கூட்டணிக் கட்சிகள் பந்த் நடத்த தீர்மானித்து அறிவிப்பும் வெளியிட்டது.

எதிர்க்கட்சிகளின் தடையை சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த போதிலும், டெல்லி உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு பந்த்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.

அவ்வளவுதான் அ.தி.மு.க., 'தனது வழக்கின் காரணமாக பந்த்துக்கு தடை விதித்தது டெல்லி" என்று உரககக் கூவிக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் அசராத தமிழ்க ஆளும் கூட்டணிக்கட்சி அதிரடியாக உண்ணாவிரத அறிவிப்பை வெளியிட்டதோடு இன்று அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது.

அரசு பஸ்கள் இன்று சென்னை உள்பட தமிழக மாவட்டங்களில் பெரும்பாலும் இயங்கவில்லை. தனியார் பேருந்துகள் மட்டும் அதுவும் அ.தி.மு.க. அனுதாபிகளின் பேருந்து மட்டும் சும்மா ஓடிக்கொண்டிருக்கிறது.

பந்த்துக்கு தடை வாங்கியதன் மூலம் அ.தி.மு.க.வும் வெற்றிபெற்றுவிட்டது, உண்ணாவிரதம் அறிவித்தும் பந்த்தைப் போன்ற சூழலை தமிகத்தில் நிலைநாட்டியதன் மூலம் தி.மு.க. கூட்டணியும் வெற்றி பெற்றுவிட்டது.

ஆனால் பந்த் இல்லை என்று பள்ளி கல்லூரிக்கு புறப்பட்டவர்களும், வேலைக்குசென்றவர்களும் பேருந்துகள் இயங்காத காரணத்தால்போங்கடா நீங்களும், உங்க அரசியலும் என்று வசைமாறிப் பொழிந்தபடி வீட்டுக்கு திரும்பிவந்துள்ளனர்.