செவ்வாய், ஏப்ரல் 27, 2010

விழிப்புணர்வுக்கு உதவுங்கள்!




நண்பர்களுக்கு வணக்கம்... எனது ஊரில் என்னுடைய ஆசிரியரின் பங்களிப்புடன் நடைபெறும் இந்த விழிப்புணர்வு பேரணிக்கு தங்களால் இயன்ற வகையில் உதவ வலை அன்பர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

திங்கள், ஏப்ரல் 26, 2010

வெளிச்சம்!

ஏல... அந்த எதிர்வீட்டுப் பபயலும் உன்னமாதிரிதானல்ல... ஊங்கூட ஒண்ணாத்தானே படிக்கிறான். ஒங்க ரெண்டுபேருக்கும் வாத்தியாரு ஒண்ணுபோலத்தான சொல்லிக் கொடுக்காரு! அப்புறம் ஏண்டா மார்க் உனக்கு குறைஞ்சிருக்கு. அந்தப் பயலப் பாருல... நல்ல மார்க் எடுத்திருக்கான். பரிசெல்லாம் கொடுக்கிறாங்க. எனக்கு அதைப் பார்க்கும்போது உன்னை நெனைச்சி வயிறெரியுது. அவன் மாதிரி நீயும் மார்க் வாங்குனா உனக்கும் பரிசு தருவாங்கல்லா... நானும் பெருமையா எம்புள்ளை பரிசு வாங்கியிருக்கான்னு சந்தோஷப் படுவம்ல... அவன் மூத்திரத்தைக் குடிச்சாக்கூட உனக்கு எல்லாம் புத்தி வராதுல... எப்படியும் உருப்படாமப் போ...

அப்பா வழக்கம்போல் சூடான அர்ச்சனைகளை வழங்கிவிட்டு விசுக்குன்னு வீட்டிலிருந்து வெளியேறி ரோட்டுக்குப் போனார்.

ஆமா இது எப்பவும் நடக்குறதுதான... என்னமோ இவுக மட்டும் பெரிய ஐ.ஏ.எஸ். படிச்சு கலெக்டரு வேலை பார்க்குறாங்க, படிக்கிற காலத்துல என்னமோ ஸ்கூல் பர்ஸ்ட் மாதிரி பேசுறாங்க... உங்கப் புள்ளைத்தான உங்கள மாதிரி தானே நான் வருவேன். உங்க அளவுக்கு பெயிலாகி பள்ளிக்கூடத்துக்கு மூட்டை கட்டாம எண்பது சதவீத மார்க் வாங்கிட்டுத்தானே வர்றேன். அடுத்த பயக்கூட கம்பேர் பண்ணி என்னத் திட்டாட்டா உங்களுக்கு தூக்கமே வராது... மனசுக்குள்ளே அப்பாவோடு சண்டையிட்டபடியே வெளித்திண்னணக்குப் படிக்கப் போனேன் எதிர்வீட்டிலிருந்து வரும் லைட் வெளிச்சத்தில்!

வெள்ளி, ஏப்ரல் 23, 2010

இறைவனின் முத்திரை (விரல் ரேகை)


சென்னையின் பிரபலமான சன் டிடெக்டிவ் நிறுவனத்தின் உரிமையாளரும், தமிழக காவல்துறையின் விரல்ரேகை பிரிவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவருமான திரு.வரதராஜன் அவர்களை விகடன் மேடை நிகழ்ச்சியில் சந்திக்க முடிந்தது. அவரது பேச்சிலிருந்து...
உடலை அங்ககீனப் படுத்தி குற்றவாளிகளை அடையாளம் காணும் நிலையை உருவாக்கி வைத்திருந்தனர் தொடக்க காலத்தில்.
இது சரியாக இல்லாததை தொடர்ந்து குற்றவாளிகளின் உயரம், உடல் பருமன், விரல் நீளம், கைகளின் நீளம் என்னும் அளவீட்டு முறையில் குற்றப்பட்டியல் தயாரித்து வைத்திருந்தனர். ஆனாலும் ஒரே முக ஒற்றுமையைத் தவிர அனைத்து ஒற்றுமையுடன் குற்றவாளிகள் இருந்த போது இந்த முறையும் சரியில்லை என்று ஒதுக்கினர்.
அப்போது வெளிநாட்டறிஞர் ஒருவர் கண்டு பிடித்ததுதான் விரல்ரேகை பதிவு முறை. நமது விரல்களின் மேல்புறத்தை பதித்தல் விரல்ரேகை பதிவு எனப்படுகிறது. ஒரே கையில் உள்ள ஐந்து விரல்களின் பதிவும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை. இரட்டையர்களாக இருந்தாலும் அவர்களின் விரல் ரேகையும் ஒன்றாக இருப்பதில்லை.
தீயில் விரல்கள் பாதிக்கப்பட்டாலும் புதிதாக மேல்தோல் வளரும்போது ஏற்கனவே இருந்த ரேகையே மீண்டும் உருவாகிறது.
இடது கை பெருவிரலை நாம் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.அதனால் அதன் ரேகைப் படலம் தெளிவாக இருப்பதால்தான் நாம் இடது கை பெருவிரல் ரேகையை பதியச் சொல்கிறார்கள். தற்போது பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு அலுவலக விஷயங்களுக்காக பத்து விரல்களின் ரேகைகளும் பதிவு செய்யப்படுகிறது.
திரைப்படங்களில் காட்டப்படுவது போல் போலியான விரல்ரேகைகளை தயாரிப்பது எளிதல்ல. அவ்வாறு தயாரிக்கப்பட்டாலும் நிபுணர்கள் அதைக் கண்டறிந்து விடுவார்கள்.
குற்றவாளிகளுக்கான அடையாளமாக மட்டும் பயன்படுத்தாமல் அரசு குடிமக்களுக்கான அட்டைகள் தயாரிக்கும் போது விரல் ரேகையைப் பயன்படுத்தத் தொடங்கினால் போலி ரேஷன் கார்டு தொடங்கி, இறந்தும் வாழும் வாக்காளர்கள் அடையாள அட்டை வரை மாற்றத்தைக் கொண்டு வந்து விடலாம். (என்ன ஆட்சியாளர்களுக்குத்தான் சிக்கலாகி விடும்!)
உலக அளவில் தமிழக காவல்துறையில் தான் முதன் முதலில் 1895ம் ஆண்டு விரல் ரேகைப் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. இது பெருமையான விஷயம் ஆனாலும் உலக அளவில் விரல்ரேகைப் பிரிவில் தற்போது பயன்படுத்தப்படும் புதிய யுத்திகள் நமது காவல்துறையில் பயன்படுத்தப்படுவதில்லை. அந்த முன்னேற்றம் இருந்தால் விரல்ரேகை பிரிவில் காவல்துறையின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்.

இன்று தேசிய அளவில் விரல் ரேகைப் பிரிவுகளை ஒன்றிணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படி செய்யப்பட்டால் குற்றவாளிகளின் கைரேகை இந்திய அளவில் அனுப்பப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கீழ்வரும் தகவல் டார்லிங்... டார்லிங் என்னும் பிளாக்கில் தரப்பட்டிருந்ததை கூடுதலாகப் பார்வைக்கு தருகிறேன்.
பண்டைய பாபிலோனியர்கள் அவர்களுடைய வியாபார கொடுக்கல் வாங்கலை பதிவு செய்வதற்காக தங்கள் கைவிரல் பணிகளை களிமண்ணில் வைத்து அழித்தி பதிந்தனர். வியாபார கொடுக்கல் வாங்கலை சீனர்கள் மை தடவி தங்கள் விரல் ரேகைகளை பதிவு செய்தனர்.மேலும் அதன் மூலம் குழந்தகளை அடையாளம் காணவும் விரல்ரேகை பதிவுகளை பயன் படுத்தினர்.
19 ஆம் நூற்றாண்டு வரை விரல் ரேகை பதிவுகள் குற்ரவாளிகளை கண்டறிய பயன்படுத்த்ப்படவில்லை.1858 ஆம் ஆண்டு இந்தியாவில் கூக்ளி மாவட்டத்தில் உள்ள ஜங்கிப்பூரில் முதன்மை நீதிபதியாக பபீயாற்றிய ஆங்கிலேயர் சர் வில்லியம் ஹர்ஷ்ல்
குற்றங்களை குறைப்பதற்காக விரல் ரேகைகளை பதிவு செய்யும் முறையை பயன்படுத்த தொடங்கினார்.
அதற்கு சில ஆண்டுகள் கழித்து ஸ்காட்லாந்தை சேர்ந்த டாக்டர் ஹென்றி பால்ஸ் ஜப்பானில் பபீயாற்றிய பொழுது அநாட்டு கலைஞர்கள் தங்கள் பழங்கால படைப்புகளில்
அவர்களுடைய விரல் ரேகைகளை பதிவு செய்து இருப்பதை கண்டறிந்தார். இது அவருக்குள் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விரல் ரேகை தொடர்பாக ஆராய தொடங்கினார்.1880 இல் பால்ஸ் தனது உறவினரான புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர்
ஜார்லஸ் டார்வினுக்கு கடிதம் எழுதி விரல் ரேகைகளை பகுத்தறிவதற்கான
ஒரு முறையை கண்டறிய உதவி கோரினார்.
ஆனால் டார்வின் மறுத்து விட்டார்.டார்வின் மற்றொரு உறவினரான சர் பிரான்சிஸ் ஹேல்டன் என்பவருக்கு கடிதத்தை அனுப்பி வைத்தார். ஹேல்டன் உலகின் பல பகுதிகளில் உள்ள மனிதர்களின் உயரம் எடை ஆகியவற்றை ஆய்வு செய்து அவை எப்படி பரம்பரை பரம்பரையாக தொடரந்து வருகின்றன. என கண்டரீயும்ஜ் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். அவர் இந்த கடிதத்துக்கு மதிப்பளித்து சுமார் 8 ஆயிரம் விரல் ரேகைகளின் மாதிரிகளை சேகரித்து அவற்றி ஆய்வு செய்தார்.
1892 இல் பிங்கர் பிரிண்ட்ஸ் (FINGER PRINTS) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டார். இந்த புத்தகத்தில் தான் கைவிரல் ரேகைகளை வைகைப்படுத்துவதற்கான் ஒரு முறையினை குறிப்பிட்டு இருந்தார். இது தான் முதன் முதலில் பகுத்தறியப்பட்ட ஒரு நடைமுறை.இது விரல் ரேகைகளில் உள்ள வளைவுகள்,துளைகள்,அலைகள் · (ARCHES,LOOPS,WHORLS) இவற்றை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது.

புதன், ஏப்ரல் 21, 2010

அச்சகத்தெரு

"ஏலே நம்மூரு கோயில் திருவிழாவுக்கு அய்யா வந்திருக்காங்களே... எப்படியும் வேலைக்கு ஆள் எடுப்பாவடே... நாமளும் போய்ச் சேரலாம்?''

"சரிடே... அய்யாக்கிட்ட வேலை கேக்குறதுக்கு முன்னாடி அய்யாவோட எடுப்பு ஒருத்தர் இருப்பாருடே... அந்த அண்ணாச்சியக் கவனிச்சா நமக்கு சிபாரிசு பண்ணுவாருலே''

"எடுப்புக்கு எவ்வளவுடே கொடுக்கணும்"
"ஒருமாசச் சம்பளத்தைக் கொடுக்கணும்டே. முழுச்சம்பளத்தையும் கொடுக்காட்டியும் பரவாயில்லை. இரண்டு தவணை கேட்டு அந்த அண்ணாச்சி பெரிய மனசு பண்ணி சேத்து வுட்ருவாருலே"

"டேய் மக்கா! என்னலா இம்பூட்டு கூட்டமா இருக்கு... நாமத்தான் சீக்கிரம் வர்றோம்னு நெனைச்சா அதுக்கு முன்னாடியே இவ்ளோ பேரு நிக்கிறாங்களடே?"

"எவ்ளோ பெரு நின்னாலும் நமக்கு வேலை கிடைச்சிரும்ல. எடுப்புக்கிட்ட அட்வான்ஸா பணத்தைக் கொடுத்தாச்சுல..."

"வேற எதுவும் எடுப்பு சொன்னாரேடே?"

"ஆமாம்ல... அய்யாவப் பார்த்ததும் டக்குன்னு கால்ல வுழுந்துரணுமாம். அய்யா நீங்க தான் எங்களுக்கு எல்லாம்னு டயலாக்குலாம் பேசணுமாம். அவரு எழுந்திரிப்பான்னு சொன்னாக்கூட கால விடக்கூடாதாம். அப்ப எடுப்பு பக்கத்துல இருந்துட்டு, அய்யா இது நம்ம பயலுவ தான்னு மண்டைய சொறிவாராம். அப்பத்தான் அய்யா நம்ம கையில இருக்கிற பயடோட்டாவை வாங்கிப் பார்த்துட்டு வேலையில சேர்த்துக்கலாம்னு எழுதி கையெழுத்துப் போடுவாராம். அப்ப எழுந்திருச்சு அய்யாவுக்கு நன்றி சொல்லிட்டு திரும்பவும் காலைத் தொட்டுக் கும்பிட்டுட்டு கையக் கட்டிட்டே வெளியே போயிரணுமாம்."

"அவர் காலுல விழுந்தாத்தான் வேலைக் கிடைக்கும்னு சொல்லு... அப்படி ஒரு வேலைத் தேவையாடே...?"

" 'அங்காடித் தெரு'வுல மட்டும் வேலைக்கு சேக்குறதுக்கு என்னெல்லாம் செய்றாங்க. ஒரு துணிக்கடையில வேலைக்கு சேர்றவங்களுக்கே இந்த மாதிரில்லாம்னா... நாம தமிழகத்தின் நம்பர் ஒன் நாளிதழ்ல வேலைக்கு சேரணும்னா இதையெல்லாம் செஞ்சாத்தாணே முடியும்"

சனி, ஏப்ரல் 03, 2010

எல்லாத்தையும் பாருங்க!

தமிழகத்தையே கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக உலுக்கிப் போட்டு வருகிறது போலி மருந்து விவகாரம்...
காலாவதியாகி குப்பைக்கு அனுப்பப்பட்ட மருந்து, மாத்திரைகளை எடுத்துவந்து புதிய உறைகள், லேபில் இட்டு மறுபடியும் விற்பனைக்கு அனுப்புவது,
விலை மலிந்த மருந்துகளை வாங்கி அதே தரத்தில் விலை கூடுதலான மருந்துகளின் லேபிள்களை ஒட்டி கூடுதல் விலைக்கு விற்பது,
ஏதோ ஒரு பொருளை மாத்திரை என்ற பெயரில் விற்பனைக்கு அனுப்பி விடுவது...
இப்படியான வழிகளில் இன்று போலியான, காலாவதியான மருந்து மாத்திரைகள் நம் பாவனைக்கு வந்து நம்மை திகில் கிளப்பி விட்டிருக்கின்றன.
கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் பாணியில்... அரசின் நடவடிக்கைகள் தற்போது தூண்டிவிடப்பட்டு மருந்து கடைகள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் என ஆங்காங்கே அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான காலாவதியான, போலியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன.
மீனாட்சி சுந்தரம், சஞ்சய் குமார் உள்பட சுமார் எட்டுக்கும் மேலானோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளன. தேடுதல் வேட்டை இன்னும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
நிற்க...
ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபம் தீ விபத்து, கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் பலியானது ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்தே கல்யாண மண்டபங்கள் அமைப்பதற்கு விதி வகுக்கப்பட்டது. கூரைக் கொட்டகைப் பள்ளிகளுக்கு தடை விதித்து திருத்தப்பட்டது.
எல்லாம் நடந்து உயிர்கள் பல பலியான பின்னரே அரசு சக்கரம் முடுக்கிவிடப்படுகிறது. அதற்கு முன்பாக பள்ளிக்கூடம், கல்யாண மண்டபங்களை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அதே போல்தான் இன்று போலி மருந்து விவகாரத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. யானைக் கவுனியில் சிறுமி ஒருவர் காலாவதியான மருந்து உட்கொண்டு மரணமடைந்த செய்தி பரபரப்பான போதே அரசு சக்கரம் தன் ஆய்வுப் பணியை மேற்கொண்டிருந்தால் இதுபோல் உயிர்களோடு விளையாடும் இந்த உன்மத்தர்களை கண்டறிந்து மக்கள் அரங்கில் நிறுத்தியிருக்கலாம்.
ஆனால் அரசு அதிகாரிகளுக்கு போகவேண்டியது போய்க் கொண்டே இருந்தால் யார்தான் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள். ஏதாவது நிகழ்ந்து விட்டால் உடனே எங்களிடம் அலுவலர்கள் இல்லை, அது இல்லை, என்று நொட்டை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்...
சரிப்பா இப்பவாவது நடவடிக்கை எடுக்கிறீங்களே நன்றி!
இப்ப நடவடிக்கையை அப்படியே மெடிக்கல் பீல்டுல மட்டும் காட்டிட்டு இருக்காதீங்க. இதோ இன்னும் ரெண்டு மாசத்துல புதிய கல்வியாண்டு பிறக்குது. தங்கள் பிள்ளைகளை புதுசா கல்விநிலையத்துல சேர்ப்பாங்க.
நாங்கதான் தரமான கல்வி தாரோம், எங்கக்கிட்டதான் எல்லா வசதியும் இருக்கு, புது பில்டிங்கெல்லாம் கட்டிருக்கோம் அதனால டொனேஷனா ஒரு இருபத்தைந்தாயிரத்தை வெட்டுங்க என்று எல்.கே.ஜி.க்கே டிமாண்ட் வைக்கும் தனியார் பள்ளிக்கூடங்கள் பக்கமும் பார்வை வலையை விரிங்க. அரசு பள்ளிகளும் நல்லபடியா கல்வி தருவாங்கன்னு மக்கள் சொல்ற அளவுக்கு அவுகளையும் தரம் உயர்த்துங்க...

அப்புறம் இன்னொன்னு... ஏம்பா இந்த சாமியார் படுத்தார்னு செருப்பால அடிச்ச மக்கா, நம்ம உயிருக்கே கொல்லி வைக்கிற அளவுக்கு போலி மாத்திரையெல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கான். அவன்கிட்டயும் கொஞ்சம் பாய்வோமா?