

"இனிமேலும் அந்த அம்மாவை ஆட்சியில் அமர வைத்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாத்தமுடியாது" - 95 தேர்தல் களத்தில் தமிழகத்தின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் உதிர்த்த வாசகம் அவரை நேரடி அரசியல் களத்துக்குள் பிரவேசிக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்தாலும், சொன்னாலும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டு அவரே வேண்டாம் என்றாலும் அவரைப் பற்றிக்கொண்ட அரசியல் விடுவதாக இல்லை.
டாக்டர் ராமதாஸுக்கு எதிராக கருத்து கூறி 'பாபா' திரைப்படத்தை அவர்கள் திரையரங்குகளில் ஓட விடச்செய்யாமல் தடுத்ததிலிருந்து தமிழக அரசியலில் ரஜினி கூடுதலாகக் கவனிக்கப்பட்டார்.
பின்னர் ஜெயலலிதாவுடனும், கருணாநிதியுடனும் சுமூகப் போக்கை மேற்கொண்டு தன்னைக் காத்துக் கொள்ள பெரும்பாடுபட்டுக் கொண்டு இருந்தாலும், அரசியல் கழுகுகள் எப்போதும் அவரை துரத்துவதற்கான நேரம் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.
சமீப நாட்களாக தமிழக அரசின் விழாக்களிலும், தமிழக முதல்வருக்கு எடுக்கப்படும் விழாக்களிலும் அரசவைக் கலைஞர் போல இவரும் அழைக்கப்பட்டும் வருகை தந்து வாழ்த்துரைத்தும் வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னால் திரைப்படத்துறை சார்பில் முதல்வருக்கு எடுக்கப்பட்ட விழாவில் நடிகர் அஜீத் பேசியபோது, தங்களைக் கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் அழைத்து வருவதாக உண்மையை சபையறியாமல் பேசிவிட்டார். இந்த உண்மைக்காகவே ரஜினிகாந்த்தும் சபையிலேயே தனியாக எழுந்து கைதட்டிவிட்டார்.
முதல்வர் முன்னால் எப்படி இவர் பேசலாம் என்று அஜீத்தையும், எப்படி ஆமோதித்து கைதட்டலாம் என்று ரஜினியையும் இப்போது பிடித்து விட்டார்கள் அரசியல்வாதிகளின் அருவருடிகள் கூடவே அரசியல் முகம் மறைத்து திரியும் கலையுலகினரும்.
எங்கே இது மீண்டும் தலைவலியாகுமோ என்று தன் மகள் திருமண நிச்சயதார்த்தத்துக்குப் முதல்வர் வந்த பிறகும் மீண்டும் அவரது இல்லம் சென்று தனி சந்திப்பு நடத்தி தன் விளக்கத்தை தெளிவுபடுத்தியதோடு, நடிகர் அஜீத்தையும் முதல்வரை சந்திக்கச் சொல்லி விளக்கமளிக்க வைத்தார் ரஜினி.
ஆனாலும் இப்போது பிரச்னை தீரவேயில்லை. முதல்வரை சந்தித்து திரும்பும் முன்னதாகவே, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வீட்டில் கல்லெறிந்ததாக அஜீத் மன்றத்தினர் மீதும், தாக்குதலுக்கு தூண்டியதாக அஜீத்குமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறுநாள் பார்த்தால் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் வி.சி.குகநாதன், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன், இருவரும் சங்கமுடிவுகளுக்கு கட்டுப்படாவிட்டால் சங்கத்திலிருந்து தூக்கி வீசப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வமோ அஜீத் படத்தை திரையிடுவதா வேண்டாமா என்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் சில தினங்களில் நடிகர் சங்கம் சார்பாகவும் இந்த இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் அழுத்தம் தரப்படும்.
பொதுச்சபையில் தனக்கான மரியாதை குறைந்ததாக கருதிய ஒரு தனி மனிதரின் கோபம் எந்த அளவுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதே ரஜினி, அஜீத் விவகாரங்களுக்கான விதை என்பது சொல்லாமலே தெரியும்.
கொசுறு: இப்போது அரசின் விழாக்கள் என்றாலே இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் மட்டுமே குத்தகைக்கு எடுத்து ஒளிபரப்பி வருகின்றன. இந்த ஒளிபரப்பின் விளம்பரம் அதிகரிக்க வேண்டும் என்றால் அரசவைக் கலைஞர்கள் (ரஜினி, கமல்....)மற்றும் துணை நிலைக் கலைஞர்கள் (விஜய், சூர்யா, அஜீத், சிம்பு....) கலந்து கொள்ள வேண்டும். அதனால்தான் அவர்கள் மிரட்டப்பட்டாவது விழாக்களுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இல்லாவிட்டால் அவர்களது வீட்டில் வருமானவரித்துறையிலிருந்து கார்ப்பரேஷன் வரை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
கூடுதல் கொசுறு: திரை நட்சத்திரங்களை தங்கள் விழாக்களுக்கு அழைத்து பப்ளிசிட்டி தேடிக் கொள்வது என்பது காமராஜர், அண்ணா, காலத்திலிருந்தே நடந்து வருகிறது. காலங்களுக்கேற்ப கலைஞர்களும், அரசியல் தலைவர்களும் மாறிக் கொண்டே வருகிறார்கள். அவ்வளவுதான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக