புதன், அக்டோபர் 07, 2009

என் மகள்


‘‘அம்மா என்னோட மேத்ஸ் புக்க எங்கன்னு தெரியலம்மா... ஸ்கூலுக்கு நேரமாயிட்டு இருக்கும்மா... வந்து கொஞ்சம் எடுத்துத்தாம்மா...’’ பள்ளியூனிபார்மை இன் செய்தபடியே வாயில் கவ்விய டையுடன் திங்கட்கிழமைக்கான பரபரப்பில் முக்கல் முனகலாக வார்த்தை வெளியே வந்தன பிரியாவிடமிருந்து.
பிரியா சாந்தியின் ஒரே மகள். செல்லத்துக்கு செல்லம், கண்டிப்புக்கு கண்டிப்பு என வளர்க்கப்பட்டவள். ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். பள்ளியில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிக்கோப்பையை தன் தாய்க்கு பரிசளித்து மகிழ்பவள். ஸ்கூல் யூனிபார்மில் பார்த்தால் ஆரம்ப கால த்ரிஷாவை நினைவு படுத்துவாள்.
‘‘ஏம்மா நேத்து ஹோம் ஒர்க் செஞ்சுட்டு அப்படியே தூங்கிட்ட. அந்த புக்க எடுத்து உன்னோட கப்போர்ட்லதாம்மா வச்சேன். பார்த்து எடுத்துக்க...’’ சமையலறையில் மதிய உணவை டிபன் பாக்ஸில் வைத்தபடியே சத்தம் கொடுத்தாள் சாந்தி.
கப்போர்ட்... அம்மாவின் வாய் மொழிந்த வார்த்தை பிரியாவை சில நொடிகள் உறைய வைத்தது. அம்மா கப்போர்ட்ல புக்ஸ வச்சுட்டு மட்டும் வந்தாங்களா, இல்லை அந்த போட்டோவையும் பார்த்து விட்டார்களா? அப்படி பார்த்திருந்தால் அம்மா ஏதாவது கேட்டிருப்பார்களே. குழப்பத்தோடு கப்போர்ட்டுக்கு வந்தவள் மேத்ஸ் புக் அங்கே இருந்ததை எடுத்துவிட்டு, கலக்கத்துடன் பள்ளிக்கு கிளம்பினாள்.
பிரியா பள்ளிக்கு போனதும், அம்மாவும் தன் நிறுவனத்துக்கு வேலைக்கு கிளம்பிவிட்டாள்.
கதவைப் பூட்டி சாவியை தன் கைப்பையில் வைத்தவள் தெருமுனையில் நின்றிருந்த, வழக்கமாக அலுவலகத்துக் சென்று வரும் மாதாந்திர வாடகை வேனில் ஏறிக்கொண்டாள்.
ஏற்கனவே வண்டிக்குள் இருந்த அவளது நிறுவனப் பெண்கள் வாசித்துக் கொண்டிருந்த கந்தர்சஷ்டி கவசத்துக்குள் தன்னை இனணத்தபடி வாய் முணுமுணுத்தாலும், பிரியாவின் கப்போர்டில் தான் பார்த்த போட்டோ அவள் மனசுக்குள் சுழன்றடித்தது. எதையும் தெளிவாகப் பேசும் பிரியா ஏன் போட்டோவை மறைத்து வைக்க வேண்டும்...

கந்தர்சஷ்டி கவசம் முடியவும், நிறுவனத்தை வேன் அடையவும் சரியாக இருந்தது.
புஷ்பா... பணியிடத்தில் மட்டும் இல்லாமல், வேனிலும் சாந்தியின் அருகில் அமர்ந்து வருபவள்.
‘‘சாந்தி, தேவையில்லாத கதைகளைப் பேச வேண்டாம், ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் குறை சொல்ல வேண்டாம்னுதான், நாம் வேனில் கந்தர்சஷ்டி கவசம் பாடி வருகிறோம். வழக்கமா சுருதி கூடியிருக்கும் உன் குரலில் இன்னைக்கு ஏன் சுரத்தே இல்லாமல் இருந்தது_’’ & பதில் தேடி கேள்வியை வீசினாள் புஷ்பா.
மவுனம் மட்டுமே சாந்தியின் பதிலாக இருந்தது.
அது ஒரு தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம். சாதாரண டெயிலராகப் பணிக்கு சேர்ந்த சாந்தி தன் கடமை உணர்ச்சியாலும், தன்னுடைய செயல்திறனாலும் இன்று அந்த நிறுவனத்தின் ஆர்டர் டேக்கராக பணி செய்து வந்தாள். வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களை இணையத்தின் வழியே தொடர்பு கொண்டு ஆர்டர் எடுப்பது, அரசு மருத்துவமனைகள், சீருடைப் பணியாளர்களுக்கான சீருடைகள் தைத்துக் கொடுப்பதற்கான ஆர்டர் என சகல ஆர்டர்களையும் நிறுவனத்துக்கு பெற்றுக் கொடுத்து, அந்த நிறுவனம் நல்ல வளர்ச்சி பெற்றதில் தன் பங்கையும் கலந்தே வைத்திருந்தால்.
வேலைக்கு வந்ததிலிருந்தே போட்டோ தடுமாற்றம் அவளுக்குள் குடிகொண்டே இருந்தது. யாரைப் பார்க்கக் கூடாது என்று வைராக்கியம் காட்டி வந்தோமோ அந்தாளுடைய போட்டோ. நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.
மேல்மருவத்தூர்...
பஸ் ஸ்டாண்ட் பக்கம் இருந்த அந்த நிறுவனத்துக்குள் நுழைந்தாள். ‘‘மேடம், டெய்லர் வேலைக்கு ஆள் தேவைன்னு சொன்னாங்க. எனக்கு டெய்லரிங் வேலை தெரியும். இங்க வேலை கிடைக்குமா?’’ & இந்தாங்க டெய்லரிங் படிச்ச சர்டிபிஃகேட்.
வாங்கிப் பார்த்த அந்த மேடம் சாந்திக்கு வேலை போட்டுக் கொடுத்தாள். உற்சாகமாக அந்த எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்குள் நுழைந்தவளிடம்,
‘உம் பேரு என்ன?’ கட்டிங் மாஸ்டர் சேகரின் கரகரகுரலில் வந்த கேள்வி சாந்தியை எச்சில் விழுங்கியபடியே பதில் சொல்ல வைத்தது.
‘‘போய் அந்த மெஷின்ல உக்காரு.’’ கை காட்டிய இடத்தில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள் சாந்தி. அவள் மிதித்து பழகிய சாதாரண மெஷின் இல்லை அது. மின்சாரத்தால் இயங்கும் அந்த மெஷினின் வேகமும் அதிகம்.
தனக்கு வந்த கட்டிங்கை சிரமத்துடன் தைத்துக் கொடுத்தாள்.
‘‘முதல் நாள் அப்படித்தான் இருக்கும். பழகப் பழக சரியாகிடும்’’ & கரகர குரலில் இருந்தே வந்தது ஆறுதல்.
சில நாட்களில் சாந்தியின் கைக்கும், காலுக்கும் தையல் மெஷின் எளிதாகப் பழகியது. சேகரும் கூடத்தான்.
சாந்தி, உன்னை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படுறேன். படீரென சேகர் கேட்க, முதலில் தடுமாறினாலும், பெற்றோரிடம் கேட்கச் சொன்னாள்.
சுபயோக சுபதினத்தில் திருமணம் நிறைவேறியது.
கால ஓட்டம் சாந்தியை ஒரு பெண் குழந்தைக்கு தாயாக்கியது. சேகருக்கு சாந்தி மீதான நாட்டத்தைச் சலிக்கச் செய்துவிட்டது.
‘‘நல்லாத்தானே இருந்தீங்க. ஏன் இப்படி மாறுனீங்க. அந்தப் பொண்ணுகூட ரொம்ப ஓவராப் பழகுறீங்க. இது நல்லாயில்லை... உங்களுக்குன்னு நான் இருக்கேன். குடும்பத்துக்காரங்களுக்கு தெரிஞ்சா அசிங்கமாப் பேசுவாங்க’’ & தவித்தாள் சாந்தி.
‘‘உன் அறிவுரையை நிப்பாட்டு. அவகூட பழகுறது உனக்குப் பிடிக்காட்டி நீ வேலைக்கு வராதே. எனக்கு அவதான் வேணும். இஷ்டம் இருந்தா சகிச்சுக்க... இல்லாட்டி போடி வெளியே’’ & பாரின் சரக்கின் நெடி சேகரின் குரலிலிருந்து பரவியது.

சேகர் & சாந்தி குடும்ப கசமுசா தையல் எந்திரத்தை விட வேகமாக ஓடியது நிறுவனத்தில். போதையின் உச்சத்தில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணை வீட்டுக்கே அழைத்து வந்து சல்லாபித்துக் கொண்டிருந்தான் சேகர். எதேச்சையாக பெர்மிஷன் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த சாந்தி வீட்டில் நடந்து கொண்டிருந்த அநாச்சாரத்தைப் பார்த்துப் பதறிப் போனாள்.
‘‘கட்டுனவளுக்கு மட்டும் புருஷனா வாழத்தெரியாத நீயெல்லாம் ஒரு மனுஷன். மனசோடு ஒத்து வாழ்றதுதான் மாங்கல்யம். இப்படி சதைக்கு அலைஞ்சி..... தூ..... இப்படி ஒரு புருஷனும் எனக்கு வேண்டாம், தன் அப்பா ஒரு பெண் சபலிஷ்ட்டுன்னு என் பொண்ணுக்கும் தெரிய வேண்டாம்.’’
ஆவேசம் வந்தவள் போல் பேசியவள், 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தன் மகளைத் தூக்கிக் கொண்டு வெளியேறினாள்.
மனதில் ஏறிய வெறி அவளைத் தன் உறவுகளின் கண்களுக்கு அப்பால் செல்லச் செய்தது. பள்ளித்தோழி நினைவுக்கு வர சென்னைக்கு வந்தாள். இங்கும் ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனம் அவளுக்குக் கை கொடுத்தது.
தந்தையின் சில அக்கிரமங்களை தெரிந்து வைத்திருந்த கவிதாவிடம், சாந்தி சொல்லிச் சொல்லி வளர்த்தாள். எந்த ஆணையும் நம்பி விடாதே, நல்லா படி, நல்லபடியாக முன்னேறு. என் வாழ்க்கையின் ஒரே பிடிப்பு நீ மட்டும்தான். உனக்காகத்தான் இந்த வாழ்க்கை வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
தாய் சொல்லச் சொல்ல, மனதில் ஏற்றுக் கொண்ட பிரியா தந்தையின் நினைவுகளை வெறுத்து படித்து வந்தாள்.... இன்றைக்கு அதே பிரியாவின் கப்போர்டில் சேகரின் போட்டோ... மெலிந்த தேகத்துடன், தாடியுடன் இருந்தது அந்த சேகரின் உருவம். எப்படி வந்தது இவளிடம்.....

மனக்குழப்பம் தலைவலியாக, மத்தியானம் அரைநேரம் விடுப்பு போட்டுவிட்டு சீக்கிரமாகவே வீடு திரும்பியிருந்தாள் சாந்தி.

பள்ளி முடிந்து திரும்பிய பிரியா , வீட்டுக்கதவு ஏற்கனவே திறந்திருப்பது அறிந்து மெதுவாக உள்ளே நுழைந்தாள்.
விசும்பிய கண்களுடன் அம்மா இருப்பதை கண்டு அவள் அருகே மெதுவாக அமர்ந்தாள்.
‘‘அம்மா என்னை மன்னிச்சுடும்மா. அந்த போட்டோவை உங்ககிட்ட சொல்லாம வச்சிருந்தது தப்புத்தான்.
முந்தாநாள் பள்ளிக்கூடத்திலிருந்து ‘ஆதரவற்றோர் இல்லத்துக்கு” கூப்பிட்டுப் போனாங்க. அங்க ஆதரவற்ற நிலையில் நோய்நொடியில் அப்பா இருக்கிறதப்பார்த்தேன். ஆனா அவருக்கு நான் யாருன்னு தெரியலம்மா.
அவரு உங்களுக்குப் பண்ணுன கொடுமைகளை கூட இருந்த பார்த்ததாலே அந்த ஆளுமேல எனக்கு பரிதாபமே வரலம்மா. இன்னும் வைராக்கியம்தாம்மா அதிகமாச்சு.
இந்த வைராக்கியம் குறையக்கூடாதுன்னுதான் அவர் போட்டோவ என் கப்போர்ட்ல வச்சேன். தினம்தினம் அந்தப் போட்டோவ பார்க்கும்போது எனக்கு இன்னும் சாதிக்கணும்னு வேகம் வரும்மா. அதான் வச்சேன் என்னத் தப்பா நெனச்சுக்காதீங்கம்மா.’’

மகளின் பதில் கொடுத்த சந்தோஷம் சாந்திக்குள் இன்னும் தன்னம்பிக்கையை அதிகரித்தது.