சனி, ஆகஸ்ட் 02, 2008

சந்தனமரமும், கரிக்கட்டையும்

சந்தனமரமும், கரிக்கட்டையும்

அது ஒரு மன்னராட்சி காலம். மன்னர் மிகவும் நல்லவர், ஆட்சி செய்வதில் வல்லவர். தம் மக்களின் துன்பம் கண்டு துடித்திடுவார். உடனே உதவிகள் பல புரிந்திடுவார்.
ஒரு நாள் மன்னர் மாறுவேடத்தில் நகர் வலம் புறப்பட்டார். நகரைத் தாண்டிய காடுகளுக்குள் தன் குதிரையை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு முதியவர் மிகவும் தளர்வுடன் தன் தலையில் ஒரு கட்டிய மூட்டையுடன் வந்து கொண்டிருந்தார்.
அந்த மூட்டை அழுக்கு நிறைந்திருந்தது. முதியவரின் தளர்வு மன்னருக்குள் இரக்கத்தை அதிகப்படுத்தியது. குதிரையை விட்டிறங்கி, அந்த முதியவரிடம் சென்று அவரைப் பற்றி விசாரித்தார்.
முதியவர் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்ததும், தாந்தான் அரசன் என்றும், நகர் வலம் வந்ததாகவும் கூறி முத்திரை மோதிரத்தை காண்பித்தார்.
முதியவர் பேசத் தொடங்கினார். மன்னா, எனது மகன்களுக்கு திருமணமாகி என்னை விட்டுப் பிரிந்து தனியே சென்று விட்டனர். வயதான என்னையும், என் மனைவியையும் அவர்களால் கவனிக்க முடியவில்லை. நானும் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாமல், காட்டுக்கு வந்து மரம் வெட்டி அதை எரித்து கிடைக்கும் கரியை விற்பனை செய்து குடும்பம் நடத்தி வருகிறேன் என்றார்.
இந்த வயதிலும் உழைக்க வேண்டும் என்ற சிந்தையோடு செயல்படும் முதியவரைப் பாராட்டிய மன்னர், அங்கிருந்த ஒரு மரக்காட்டைக் காட்டி, அதிலிருக்கும் சந்தன மரங்களை வெட்ட அனுமதி வழங்கிச் சென்று விட்டார்.
ஒரு சில மாதங்கள் கழித்து மன்னர் மீண்டும் நகர்வலம் வந்தார். அதே காடு. அதே முதியவர். தள்ளாடியபடியே அழுக்கு தலைச்சுமையுடன் நடந்து வந்தார்.
மன்னரைப் பார்த்த முதியவர் மகிழ்ச்சி அடைந்தார்.
என்ன முதியவரே நலமா என்றார் மன்னர்.
எப்படி நலமாக இருக்கமுடியும் மன்னரே, நீங்கள் வழங்கிய சந்தன மரக்காட்டில் மரங்கள் முடியப் போகிறதே என்றார்.
மன்னர் குழம்பிப் போனார். நான் அனுமதி கொடுத்த சந்தனமரங்களை வெட்டி விற்றீர்களா என்று கேட்டார்.
ஆமாம் மன்னா, அந்த மரங்களை வெட்டி எடுத்து அதை எரித்து கரியாக்கி, கரியை விற்றேன் மன்னா என்றார் அந்த முதியவர்.
முதியவரின் அறியாமையை நினைத்து தன்னை நொந்து கொண்ட மன்னர், மீதமிருந்த மரங்களை வெட்டி விற்பனை செய்யச் சொல்லி சென்றார்.

நீதி: என்னத்த சொல்ல.... அவனவன் தெரிஞ்சிக்கிட்டா சரிதான்.

கருத்துகள் இல்லை: