வியாழன், ஏப்ரல் 17, 2008

தொடர்கதை

தைரியத்தை வரவழைத்தபடி மெயின் கேட்டை திறந்து உள்ளே சென்றேன். சுனாமி சுருட்டி விட்டு சென்றதைப்போல் வெறிச்சோடிக் கிடந்தது பங்களாவின் வராண்டா. சுற்றும் முற்றும் பார்த்தும் யாரும் அங்கிருப்பதைப் போல் தெரியவில்லை. மூன்றாம் மாடி தாண்டி இருந்த மொட்டைமாடியின் புகைப்போக்கி திகில் சினிமாவை நினைவு படுத்திக் கொண்டிருந்தது.
உயிர்பிரிந்த காய்ந்த சருகுகள் மட்டும் நடந்து வந்த என் காலடியில் சிக்கி கசங்கி உடலையும் உடைத்துக் கொண்டிருந்தன.
திடீரென தோள்பட்டையை தொடவும் மின்சாரம் தாக்கிய உணர்வாய் திடுக்கிட்டு திரும்பினேன், வாட்ச்மேன் நின்று கொண்டிருந்தார்.
யாருப்பா, நீ பாட்டுக்கு கேட்டை திறந்து உள்ள வந்துக்கிட்டிருக்க. எதிர்த்த டீக்கடையிலருந்து உன்னைக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.
அறுபதை தாண்டியிருந்தாலும் உழைத்து சாப்பிடும் உறுதி உடம்பில் திணறெடுத்து நின்றது.
நான்... என் பேரு ராஜா. இந்த பங்களாவோட வோனரோடு சொந்த ஊருல இருந்து வர்றேன். சொந்தக்காரந்தான்.
சொந்தக்காரன்னு சொல்ற, அவங்க யாரும் இப்ப இங்க இல்லயப்பா. மலேசியாவுல போய் செட்டிலாய்ட்டாங்களடே தெரியாதா. சரி, நீ யாரு பையம்பா.
அண்ணாச்சி நான் சௌந்தரரஜன் மகன்.
யாரு, அந்த மேக்குத் தெரு சுந்தர் மச்சனன் பையனாடே.
ஆமா அண்ணாச்சி. அண்ணாச்சி உங்க பேரு தங்கவேலா.
ஆமாம்பா. இங்க என்ன சோலியா வந்தடே.
இங்க எனக்கு வேலை கெடச்சிருக்கு. தங்க இடம் இல்ல. அப்பா தான் இந்த பங்களா அட்ரஸ கொடுத்தாங்க. அதோட பங்களா ஓனர்கிட்டயும் அப்பா பேசிட்டாங்களாம்.
அப்படியா, சரி நம்ம ஊரு புள்ளதானப்பா தாராளமா தங்கிக்க். இங்க நா மட்டும்தான் ஒத்தையில இருந்து பங்களாவ பாதுகாத்துக்கிட்டு வர்றேன். நீயும் கூட இருந்தன்னா நல்லது தானே. அது சரி ஊருல எல்லாரும் எப்படி இருக்காங்க.
வாடே, போய் டீ சாப்ட்டுட்டு வரலாம்!
ஊருல எல்லோரும் நல்ல இருக்காங்க அண்ணாச்சி. டீ அப்புறமா சாப்பிடலாம். முதல்ல குளிச்சிட்டு கொஞ்சம் தூங்கணும் அண்ணாச்சி.
டிரெயின்ல கூட்டத்துல வந்ததுல உடம்பெல்லாம் அடிச்சிப் போட்ட மாதிரி இருக்கு அண்ணாச்சி.
சரிப்பா, வா, இந்த ரூம்ல தங்கிக்க. போய் பாத்ரூம்ல குளிச்சிட்டு வந்து உக்காரு. உனக்கு டிபன் வாங்கிட்டு வந்துர்றேன்.
ஊர்க்காரன்னதும் அண்ணாச்சி காட்டிய பாசம் நெகிழச் செய்தது. மனதுக்குள் அதை ரசித்தபடியே குளியலைறையில் நுழைந்த நான் பார்த்த காட்சி அண்ணாச்சி என்ற அலறலை என்னையும் அறியாமல் என் வாய் அலறியது....

தொடர்ச்சி நாளை மறுநாள்!

கருத்துகள் இல்லை: