சனி, மார்ச் 20, 2010

உறவுகள்

அப்பா உங்கக் கூட நான் கொஞ்சம் பேசணும்...

கஷ்டப்பட்டு மகன் பேசிய வார்த்தைகள் அப்பாவின் முகத்தில் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

அப்பா.....அப்பா.... ஒரு நிமிஷம்பா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்கப்பா...

திரும்பிப் பார்த்தவர் ஒரு புன்னகையை மட்டும் பதிலாக்கி விட்டு வீட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்.

அப்பா... அப்பா... கத்தித் தீர்த்தான்...

பிரயோஜனமில்லை... அப்பாவின் பாதங்கள் படிதாண்டி பல அடிதூரத்தைத் தாண்டிக் கொண்டிருந்தது...

தொப்பென சாய்ந்தான் பக்கத்திலிருந்த ஷோபாவில்... கண்களில் முட்டிக் கொண்டிருந்த கண்ணீர் ... அயற்சியில் இமை மூடும்போது மெதுவாகக் கசிந்தது.

இப்ப அழு... போடா போ... நீயும் உன் கண்ணீரும்... காதுகளில் துல்லியமாகக் கேட்டது மனசாட்சியின் குரல்.
தப்பெல்லாம் உன் மேல வச்சிட்டு நீலிக் கண்ணீர் வடிக்காதடா?

கொஞ்சம் சுள்ளெனப் பட்டது...

நான் என்ன தப்பு செஞ்சேன்...

நீ என்ன தப்புதான் செய்யலை... வயசான மனுஷன்... எப்பவாவது அவரைப் பத்தி நீ நினைச்சிருக்கியா? அவர் என்ன செய்றாரு, எது பண்றாருன்னு என்னைக்காவது கேட்டிருக்கியா?

அவரைப் பத்தி நினைக்காமலா அவரு வசதிக்காக தனியா ரூம் கட்டிக் கொடுத்திருக்கேன். கட்டில், மெத்தை, டி.வி. ப்ரீட்ஜ்ன்னு எல்லா வசதியும் செஞ்சிருக்கேன். பேப்பர் கூட தினசரி அவருக்கு வந்துடுது. வாக்கிங் போறதுக்காக வீட்டைச் சுற்றியே கற்கள் பதிச்சி வெச்சிருக்கேன். வீட்டுல அவருக்கு டேஸ்ட் பத்தலைன்னதும் தினசரி பெரிய ஹோட்டல்லருந்து சாப்பாட்டை வரவச்சி குடுத்துட்டு இருக்கேன். அவருக்கு என்னென்ன வேணும்னு ஒவ்வொன்னா பார்த்து பார்த்து செஞ்சிட்டுதான வாரேன்.

போடா.... எப்பவாவது அவர் கூட உட்காந்து பேசியிருக்கிறியா? அவர் என்ன விரும்புனாருன்னு கேட்டுருக்கியா. அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டியா?

எனக்கு அதுகெல்லாம் ஏது நேரம்? நாலு கம்பெனி நடத்திக்கிட்டு வர்றேன். எப்போ பார்த்தாலும் பிசினஸ் பிசினஸ்னு பிஸியா இருக்குறேன். உண்மையா சொன்னா என் மனைவி மக்கள்ட்ட கூட எனக்குப் பேச நேரம் கிடைக்கிறதில்லை. ஆனாலும் அவங்களுக்கு தேவையானதை எல்லாம் செஞ்சுக்கிட்டிருக்கேன். இல்லேன்னா காச கொடுத்து அவங்களையே தேவையானதைச் செஞ்சுக்கச் சொல்லிடுறேனே...

வெறும் காசு மட்டும் மனித உறவுகளின் தேவைகளை தீர்மானிக்கிறதில்லை. அதையும் தாண்டி பரஸ்பரம் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிறதிலயும், அடுத்தவங்களோட உணர்வுகளை புரிஞ்சிக்கிறதுலயும்தான் உண்மையான உறவுக்கான அர்த்தம் இருக்கு. இப்ப நீ கொடுக்கிற வசதிங்கிறது உன்னோட தரத்துக்காக நீ போட்டு வெச்சிருக்கிற அலங்கார மேடை. காசு கொடுத்து தங்க வைக்கும் முதியோர் இல்லத்துல இருக்கிற வசதிகளை நீயும் செஞ்சு கொடுத்திருக்க. ஆனால் முதியோர் இல்லத்துலயாவது ற மற்ற முதியோர்கிட்ட மனசு விட்டு பேச முயடியும். ஆனா இங்க அதுவும் கிடையாது. பிசினஸ்மேன் என்கிற வேஷத்தை உன்னுடைய பிசினஸ் அரங்கத்திலேயே வச்சிக்க. வீட்டுக்கு வந்தா ஒரு நல்ல மகனா, கணவனா, தந்தையா உனக்கான உறவின் அடையாளத்தை வெளிப்படுத்து.

ஆமாம், நான் என்னுடைய வேஷத்தை கண்டிப்பா கலைக்கணும். அப்பத்தான் உறவுகளின் கூடா நான் இருக்க முடியும்.

நானும் திருந்திட்டேன்.

.............அவன் வேகமாக எழவும் நாடக மேடையில் திரை விழுந்தது.

சொல்லிக் கொள்ள உறவுகள் இல்லாத அந்த நடிகனுக்கு பார்வையாளர்களின் கைத்தட்டல் ஓசை நெஞ்சை நிறைத்தது.

கருத்துகள் இல்லை: