பள்ளிக்கூட நாட்கள் நினைவில் வந்ததும் என்னை திருத்திய, என்னைக் கவர்ந்த ஆசிரியர்களின் முகங்களும் என் மனக்கண் முன் வந்தது.
நான் படித்த தூய இருதய தொடக்கப்பள்ளியின் முதல் வகுப்பு ஏ பிரிவு ஆசிரியை மரியாதைக்குரிய கண்ணாடி டீச்சர். அவரது பெயர் இன்று வரை சரியாக எனக்குத் தெரியாது. எனது சாத்தான்குளம் வீட்டின் பின் பகுதியில் உள்ள வீட்டில் தற்போது குடியிருந்து வருகிறார்கள். ஊருக்கு செல்லும்போதெல்லாம் அவர்களுக்குத் தான் என் முதல் வணக்கம் கிடைக்கிறது.
கண்ணாடி டீச்சர் என் பள்ளிக்கல்வியில் சரியான அஸ்திவாரத்தை அமைத்தவர்.
இரண்டாம் வகுப்பில் சி பிரிவுக்கு சென்ற எனக்கு வகுப்பாசிரியர் ஆக்னஸ் டீச்சர். இவர்களது கண்டிப்பும், கண்ணையும், நாக்கையும் காட்டி மிரட்டும் பாங்கும் இவர்கள் மேல் பயத்தை வரவழைத்தாலும் பாசமானவர்.
3ம் வகுப்பு அ பிரிவில் எனது வகுப்பாசிரியர் திரு பத்மநாபன் சார். முந்திரி பருப்புகளை சாப்பிடுவதில் மிகுந்த விருப்பமுடையவர். சரியாக படிக்காத மாணவர்களின் விரலில் இவர் காட்டு வித்தை அவர்களையும் படிக்க வைத்து விடும்.
4ம் வகுப்பில் பி பிரிவில் சென்ற எனக்கு வகுப்பாசிரியராக இந்தவர் பங்கரா சார். இன்னும் மார்க்கண்டேயன் போல் காட்சிதரும் இவர் எளிய நடையில் பாடம் நடத்துபவர்.
5-ம்வகுப்பு அ பிரிவில் தலைமையாசிரியர் திரு ஜோசப் சார் தான் வகுப்பாசிரியர். கண்டிப்பான நல்லவர்.
உயர்நிலைப்பள்ளிக்கான படிப்பும் அதே தூய இருதய உயர்நிலைப்பள்ளியில் தொடங்கியது. 6ம் வகுப்பு முதல் அ பிரிவிலேயே எனது படிப்பு தொடங்கியது.
அருகே உள்ள தைலாபுரத்தைச் சேர்ந்த ஜெய்ரூஸ் டீச்சர் தான் எனது வகுப்பாசிரியை. சில ஆண்டுகள் கழித்து இவர் மாற்றல் வாங்கி அவர் பகுதி அருகே சென்று விட்டார்.
7ம் வகுப்பில் தான் என் ஆசானாக இருந்தவர் மரியாதைக்குரிய மகா.பால்துரை ஆசிரியர் அவர்கள். இன்றளவும் அவர்மீதான் மரியாதை தொடர்புகள் நீண்டு கொண்டே இருக்கின்றன. எனது தந்தையாரை அண்ணன் என்று உரிமையோடு அழைக்கும் பாசக்காரரான இவரை எனது குருநாதர் அந்தஸ்தில் வைத்திருக்கிறேன்.
8ம் வகுப்பில் திரு ஐசக் ஆசிரியர் தான் வகுப்பாசிரியர். இவரது கைவண்ணத்தால்தான் எனக்குள் ஒளிந்திருந்த நடிப்புத் திறமை வெளிப்பட்டது.
9ம் வகுப்பில் வகுப்பாசிரியையாக இருந்தவர் திருமதி மங்கையர்கரசி ஆசிரியை அவர்கள். எனது இல்லத்தின் வழியாக வருபவராகையால் எனது படிப்பு தொடர்பாக எனது தாயார் இவரிடம் கேட்டு தெரிந்து வீட்டில் பூஜைகள் பெற்றிருக்கிறேன்.
பத்தாம் வகுப்பில் திரு சொர்ணம் அவர்கள் தான் வகுப்பாசிரியர். கணிதத்தை இவரைப் போல் எளிமையாக யாராலும் நடத்த முடியாது. அதனால் தான் பத்தாம்வகுப்பு தேர்வில் கணிதத்தில் 97 மதிப்பெண் பெறமுடிந்தது.
இதை ஒரு பெருமையாகக் கருதித்தான் பிளஸ் 1ல் கணிதப் பிரிவை எடுத்தேன். அங்கும் திரு சொர்ணம் அவர்கள் தான் கணித ஆசிரியர். ஆனாலும் என் மண்டையில்தான் கணக்கு ஏறவில்லை. விளைபு பொதுப் பரீட்சையில் மட்டும் தக்கிமுக்கி 200க்கு 95 மதிப்பெண் எடுத்து பாஸாகி விட்டேன். வகுப்பாசிரியர் யார் என்பது சரியாக நினைவில் இல்லை.
பிளஸ் 2 வில் வகுப்பாசிரியர் திரு ரெஜிஸ்மேரி. ஆங்கில ஆசிரியையான இவர் பள்ளிக் கலை நிகழ்ச்சிகளில் நடனத்துக்கு மாணவர்களை தயார் செய்வார். இவரது நடனக்குழுவில் கண்டிப்பான நானும் இடம்பெறுவேன்.
இவர்கள் தவிர ராஜம் ஆசிரியை, சின்ன ஜேம்ஸ் சார், வேப்பங்காடு சார். (பெயர் மறந்துவிட்டது), பாப்பு டீச்சர், சிலுவை ஆசிரியர், பிரேமா டீச்சர், ஞானபுஷ்பம் ஆசிரியை, இயற்பியல் சீலி டீச்சர், வேதியியல் மகேஷ்வரி டீச்சர், வரலாறு சந்திரா டீச்சர், மற்றுமொறு சந்திரா டீச்சர், தமிழ் ஆசான் திரு ஆறுமுகம் ஆசிரியர், விலங்கியல் தேவராஜ் ஆசிரியர், தாவரவியல் ஹென்றி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் தேவகரம், ஆகியோர்களும் மனக்கண்முன் வந்து போனவர்கள்.
இவர்களைத் தவிர திரு பள்ளி ஊழியர் விஸ்வநாதன் அவர்களோடு இன்னும் சந்திப்பில் இருந்து கொண்டிருக்கிறேன்.
95ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சாத்தான்குளத்தத விட்டும் வெளியேறினேன். இன்று சென்னையில் வேலை செய்தபடி வாழ்க்கை ஓடுகிறது. வளத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்.
நினைவுகளுடன்
மு.செய்யது முகம்மது ஆஸாத்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக