''எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்... நான் வாழ யார் பாடுவார்...'' பண்பலை வரிசை வழியாக காற்றில் தவழ்ந்து வந்த பாடலில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த வாட்ச்மேன் , வாசலில் கிறீச்சிட்ட சொகுசுக் காரின் சப்தம் கேட்டு ஓடோடிச் சென்று கதவைத் திறந்து விறைப்பாக சல்யூட் அடித்தார்...
என்ன வாட்ச்மேன் பாட்டு ரொம்பவும் சலனப்படுத்திடுச்சோ! என்றபடியே காரிலிருந்து இறங்கினார் பளிச்சிடும் வேட்டி சட்டையில் மயில்வாகனன். நெற்றியில் ஒளிவிடும் திருநீற்றுப் பட்டை அவரின் கடவுள் பக்தியை பறை சாற்றியது. கூடவே உயர்நாகரிகத் தோற்றத்துடன் ஒரு தம்பதியும் இறங்கியது.
பங்களாவின் முகப்புத் தோற்றமே அந்தத் தம்பதியை வியக்க வைக்க மயில்வாகனன் முகமெல்லாம் மகிழ்ச்சி. ரொம்பத் திட்டமிட்டு கட்டப்பட்ட வீடு இது. அனுபவத்துக்கு மரியாதை கொடுக்கும் வகையில் என்ஜீனியர் பிளான் இல்லாமல் கட்டிட மேஸ்திரியோட பிளான்ல கட்டியிருக்கோம். இந்த ஈ.சி.ஆர். சாலையில் கட்டியிருக்குற எத்தனையோ பங்களாவுக்கு மத்தியில் இதனோட சிறப்பே தனி.
என்ன பண்றது எல்லாரும் அமெரிக்காவிலேயே குடிமக்கள் அந்தஸ்து கிடைச்சதனால அங்கேயே இருந்துட்டாங்க. அதனாலத்தான் இந்த பங்களாவ விக்கிறோம்.
எங்களுக்கு பிடிச்சிருக்கு. பணத்தை ஒரே காசோலையில கொடுத்துடுறோம். இந்தாங்க... சொல்லிவிட்டு சொகுசுக்காரில் ஏறிக்கொண்ட தம்பதிக்கு கை அசைவு காட்டியபடி தனது கையில் அவர்கள் அளித்த தரகு பணத்துடன் தன் குடிசைக்கு விரைந்தார் மயில்வாகனன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக